பெங்களூரு: சாய்னா நேவால் பேட்மிண்டனிலிருந்து ஓய்வுபெற போவதில்லை என அவரது பயிற்சியாளர் விமல்குமார் விளக்கமளித்துள்ளார்.
பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் கடந்த சில மாதங்களாக கடுமையான முட்டி வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிய அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் அவர் நிரந்தரமாக ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து இன்று விளக்கமளித்துள்ள அவரது பயிற்சியாளரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் வீரருமான விமல்குமார், "சாய்னா ஓய்வுபெறும் எண்ணத்தில் இல்லை" என கூறியுள்ளார். மேலும் அவரது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் விமல் கூறியுள்ளார்.
சாய்னா தொடர்ந்து விளையாடுவார் என்று உறுதியளித்த விமல்குமார், நவம்பர் 15ஆம் தேதி சீனாவில் தொடங்கவுள்ள ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்பார் என்றும் இதைத்தொடர்ந்து ஹாங்காங்கில் நடைபெறும் ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவர் விளையாடுவார் என தெரிவித்தார்.
இந்த இரு போட்டிகளும் சாய்னா நேவாலின் காயம் குறித்த நிலையை அறியும் பரிசோதனை போட்டிகளாக இருக்கும் என கூறப்படுகிறது. பயிற்சியாளரின் அறிவுரைப்படி தற்போது பெரும்பாலான நேரத்தை சாய்னா ஜிம்மில் தான் செலவிடுகிறார் என்றும் தெரிகிறது.
விமல் மற்றும் சாய்னா ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இங்கிலாந்து சாம்பியன்ஷிப் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த இரண்டு போட்டிகளிலும் இதுவரை வெற்றி பெறாத சாய்னா போட்டிக்கு முன்னதாக தன்னை தயார் படுத்திக்கொள்ள முனைப்பாக உள்ளார்.