ரியோ டி ஜெனீரோ: கோடானு கோடி இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ள பேட்மிண்டன் நாயகி சாய்னா நேஹ்வால் இன்று ரியோ ஒலிம்பிக்கில் களம் புகுகிறார். அவர் மோதும் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்குத் தொடங்குகிறது.
இதேபோல இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் தனது முதல் போட்டியில் மோதவுள்ளது. டென்னிஸில் லியாண்டர் பயஸ் ஏமாற்றி விட்டார். சானியாவும் இரட்டையரில் ஏமாற்றி விட்டார். துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை என பலவற்றிலும் நமக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. இந்த நிலையில் சாய்னா மீது இந்தியர்களின் பார்வை திரும்பியுள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாய்னா வெண்கலம் வென்றிருந்தார். அந்த அடிப்படையில் ரியோவிலும் ஒரு பதக்கத்தை சாய்னா பெறுவாரா என்ற நம்பிக்கையில் இந்தியர்கள் உள்ளனர்.
பேட்மிண்டன் போட்டியில் மொத்தம் ஏழு இந்தியர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் சாய்னா, ஜுவாலா கட்டா முக்கியமானவர்கள்.
இந்திய நேரப்படி இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா - அஸ்வினி ஜோடி, ஜப்பான் ஜோடியை எதிர்த்து மோதுகிறது.
அடுத்து ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சுமீத் ரெட்டி, மனு அட்ரி ஜோடி இந்தோனேசியா ஜோடியை எதிர்த்து ஆடுகிறது.
மாலை ஆறே முக்கால் மணிக்கு நடைபெறும் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் பி.வி. சிந்து மோதுகிறார்.
அடுத்து ஏழரை மணி வாக்கில் நடைபெறும் போட்டியில் சாய்னா தனது முதல் போட்டியில் லோஹன்னி வின்சென்டியை எதிர்த்து மோதுகிறார். நாளை அதிகாலை ஐந்தரை மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் மோதும் ஆட்டம் இடம் பெறுகிறது.
இந்தியாவின் நம்பிக்கையை எந்த அளவுக்கு இவர்கள் காப்பாற்றுவார்கள். அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறுவார்களா என்பதை நாடே எதிர்நோக்கி காத்திருக்கிறது.