காலிறுதியில் சாய்னா, சிந்து, ஶ்ரீகாந்த்
கிளாஸ்கோ: இங்கிலாந்தில் நடந்து வரும் உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டியின் காலிறுதிக்கு, இந்தியாவின் சாய்னா நெய்வால், பி.வி. சிந்து, கிடாம்பி ஶ்ரீகாந்த் முன்னேறியுள்ளனர்.
உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டி, இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டங்களில் வென்று, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சாய்னா நெய்வால், பி.வி. சிந்து, கிடாம்பி ஶ்ரீகாந்த், மூன்றாவது சுற்று ஆட்டங்களில் வென்று,காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் ஹாங்காங்கின் சியாங் நியான் யீ எதிராக களமிறங்கினார் சிந்து. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சிந்து, இதற்கு முன்பு இரண்டு முறை நேரடியாக மோதிய ஆட்டங்களில், ஹாங்காங் வீராங்கனை யீயை வென்றுள்ளார்.
பரபரப்பான ஆட்டத்தின், முதல் செட்டை, யீ வென்றார். அடுத்த செட்டில் சுதாரித்து விளையாடிய சிந்துவுக்கு, கடும் நெருக்கடி கொடுத்தார். கடும் போராட்டத்துக்கு பிறகு, 19-21, 23-21, 21-17 என்ற செட் கணக்குகளில் சிந்து வென்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டத்தில், உலக தரவரிசையில், 18வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ஆன்ட்ரீஸ் ஆன்டன்சனுடன், தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள ஶ்ரீகாந்த் மோதினார்.
தொடர்ந்து, 12 போட்டிகளில் வெற்றி என்ற சாதனையுடன் களத்தில் இறங்கிய ஶ்ரீகாந்த் 21-14, 21-18 என்ற செட் கணக்கில் சுலபமாக வென்றார்.
காலிறுதியில் அவர் உலகின் முதல் நிலை வீரரான கொரியாவின் சன் வானுடன் மோத உள்ளார். இதுவரை இருவரும் மோதிய, 8 ஆட்டங்களில், இருவரும் தலா நான்கில் வென்றுள்ளனர். அதில், கடைசி இரண்டு போட்டிகளில் ஶ்ரீகாந்த் வென்றுள்ளார்.
ஒற்றையர் பிரிவில் அஜய் ஜெயராம், மாற்று இரட்டையர் பிரிவில் பிரணவ் சோப்ரா, சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது.
அதே நேரத்தில், சாய்னா நெய்வால், மற்றொரு பதக்க நம்பிக்கையை அளித்துள்ளார். 2015 உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டியின் இறுதியில் விளையாடிய சாய்னா நெய்வால், நேற்று நடந்த ஆட்டத்தில், தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள கொரியாவின் சங் ஜி ஹூனை, 21-19, 21-15 என்ற செட்களில், 47 நிமிடங்களில் வென்றார். இதன் மூலம், காலிறுதிக்கு அவர் நுழைந்தார்.
Story first published: Friday, August 25, 2017, 22:06 [IST]
Other articles published on Aug 25, 2017


Click it and Unblock the Notifications