வ்லாடிவோஸ்டாக் (ரஷ்யா) : ரஷ்யா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சிறப்பாக விளையாடி வந்த சவுரப் வர்மா, இறுதிப்போட்டியில் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார். இதே தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணையான ரோகன் கபூர் மற்றும் குஹூ கார்க் வெள்ளி பதக்கம் வென்று இருக்கின்றனர்.
பாட்மிண்டன் அரங்கில் பாயும் இந்தியா :
இந்திய பாட்மிண்டன் வீரர்கள் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிக அளவில் தங்கப் பதக்கங்களை வெல்லாவிட்டாலும், குறிப்பிடத்தக்க அளவு வெற்றிகளை குவித்து வருகிறார்கள். இந்த குறையை போக்கும் வகையில், இரு நாட்களுக்கு முன் ஜகார்தாவில் நடந்த ஆசிய ஜூனியர் போட்டிகளில் இந்தியாவின் லக்ஷ்யா சென் தங்கம் வென்றார். அதை தொடர்ந்து, நேற்று நடந்த ரஷ்யா ஓபன் தொடரில் சவுரப் வர்மா தங்கம் வென்று இருக்கிறார்.
விட்டதை பிடித்த சவுரப் :
ஜப்பானின் கோகி வாட்டனபே (Koki Watanabe) -வுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் சவுரப் வர்மா, துவக்கத்தில் 5-11 என்ற புள்ளிகளில் பின் தங்கி இருந்தார். பின்னர் சுதாரித்து 18-18 என சமநிலையை எட்டினார். ஆனாலும், முதல் கேமை 18-21 என இழந்தார். இரண்டாவது கேமில், விட்டுக் கொடுக்காமல் ஆடிய சவுரப் 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார்.
தெளிவான ஆட்டத்தால் வெற்றி :
ஆட்டத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது கேமின் துவக்கத்தில், கோகி அதிரடியாக 9-3 என்ற புள்ளிகளில் முன்னிலையில் இருந்தார். வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருந்த சவுரப் நிலை, அவரின் தெளிவான ஆட்டத்தால் திசை திரும்பியது. இதனால் தடுமாறிய கோகி தவறுகளை செய்ய துவங்கினார். இறுதியில் 21-17 என்ற புள்ளிகளில் சவரப் வர்மா வெற்றியை பதிவு செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனின் முதல் தங்கத்தை வென்றார், சவுரப் வர்மா. அடுத்ததாக ஏசியன் கேம்ஸிலும் விளையாட உள்ளார். இந்த வெற்றி மூலம் மனதளவில் அடுத்து வரும் ஏசியன் கேம்ஸில் சிறப்பாக செயல்படும் உத்வேகம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
கலப்பு இரட்டையரில் வெள்ளி :
இந்தியா சார்பில் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்ற இணையான ரோகன் கபூர் மற்றும் குஹூ கார்க், இறுதிப் போட்டி வரை முன்னேறினர். ரஷ்ய-ஜப்பானிய கலப்பு இரட்டையர்களான இவனான் மற்றும் மின் க்யுங் கிம்-ஓடு நடந்த இறுதிப் போட்டியில் 19-21, 17-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.