ஹைதராபாத்: இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் முழங்கால் காயம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ரியோ ஒலிம்பிக்கில் உக்ரைனுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறினார். இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக்கின் போது எடுத்துக் கொண்ட பயிற்சியில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆட்டத்தின் போது வலி அதிகமாகி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இந்தியா திரும்பிய அவர், அடுத்த நாள் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாய்னாவுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்ததாக அவரின் தந்தை தெரிவித்தார்.
இதுகுறித்து மீண்டும் மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.