சாய்னா, பிரனாய் ஏமாற்றம்; மீண்டும் சிங்கிளான சிந்து
ஹாங்காங்: சூப்பர் சீரிஸ் போட்டியான ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் பி.வி. சிந்து முன்னேறினார். அதே நேரத்தி்ல், சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பிரனாய் ஆகியோர் வெளியேறியதால், பட்டம் வெல்லும் ஒரே நம்பிக்கையாக சிந்து உள்ளார்.
பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரிஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. அதில் கடைசி ஓபன் போட்டியான ஹாங்காங் ஓபன் போட்டி நடந்து வருகிறது. அடுத்ததாக சூப்பர் சீரிஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் துபாயில் நடக்க உள்ளது.

இந்த ஆண்டில் சூப்பர் சீரிஸ் பிரிவில் இதுவரை நடந்துள்ள 11 ஓபன் போட்டிகளில் இந்தியாவுக்கு, 7 பட்டம் கிடைத்துள்ளது. கடைசியாக நடக்க உள்ள சூப்பர் சீரிஸ் மாஸ்டர்ஸ் பைனல் போட்டிக்கு, நான்கு பட்டம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளார்.
ஹாங்காங் போட்டியில் அரை இறுதி வரை நுழைந்தால் தான் துபாய் போட்டிக்கு தகுதிபெற முடியும் என்ற நிலையில், சாய்னா நெஹ்வால் மற்றும் பிரனாய் இருந்தனர்.
நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில், ஜப்பானின் கசுமாசா சகாய் 11-21, 21-10, 21-5 என்ற செட்களில் பிரனாயை வென்றார். சீன வீராங்கனை சென் யூபாயிடம் 18-21, 21-19, 21-10 என்ற கணக்கில் சாய்னா தோல்வி அடைந்தார்.
சீன ஓபன் போட்டியைப் போலவே, காலிறுதிக்கு தனி ஆளாக நுழைந்தார் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி. சிந்து. ஜப்பானின் அயா ஒஹேரியை 21-14, 21-17 என்ற செட்களில் அவர் வென்றார்.
கடந்தாண்டு ஹாங்காங் ஓபனில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சிந்து, சீன ஓபன் சாம்பியனான ஜப்பானின் அகேனே யாமகூச்சியை காலிறுதியில் சந்திக்கிறார்.
Story first published: Friday, November 24, 2017, 15:17 [IST]
Other articles published on Nov 24, 2017


Click it and Unblock the Notifications