கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.. பிவி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி!
கோலாலம்பூர்: மலேசியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் கடைசி நம்பிக்கையாக இருந்த பி.வி.சிந்து மற்றும் ஸ்ரீகாந்த், இருவரும் அரையிறுதியில் தோல்வியடைந்தனர். இதுவரை, மலேசியா ஓபன் தொடரில் இந்தியா இறுதி வரை சென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சார்பில் பங்கேற்ற பாட்மிண்டன் வீரர்கள், பல பிரிவுகளில் விளையாடினர். பெண்கள் ஒற்றையர் பிரிவில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய்னா நேவால் இரண்டாம் சுற்றோடு வெளியேறினார். பி.வி.சிந்து அரை இறுதியில் விளையாடும் தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற மூவரில், கிடம்பி ஸ்ரீகாந்த் மட்டும் அரையிறுதியில் ஆடும் தகுதி பெற்றார். மற்ற இருவரும், முதல் சுற்றோடு வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

இரட்டையர் பிரிவு
இரட்டையர் பிரிவில் பங்கேற்ற ஜோடிகளும் முதல் மற்றும் இரண்டாம் சுற்றோடு தங்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டனர். சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் மட்டுமே இந்தியா சார்பில் அரை இறுதி செல்லும் வாய்ப்பு பெற்றனர்.

கடும் போட்டி
அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் மொமொடா (Momota)வை சந்தித்தார். மொமொடாவும், ஸ்ரீகாந்தும் இதுவரை, 8 முறை சந்தித்துள்ளனர். அதில் ஸ்ரீகாந்த் மூன்ற முறை மட்டுமே வென்றுள்ளார். மேலும், மொமோடா, தொடர்ந்து பதினேழு போட்டிகளை வென்று, பாட்மிண்டன் அரங்கில் அதிரடி ஆட்டகாரராக வலம் வருகிறார். இந்த கடினமான வீரரை சந்தித்த ஸ்ரீகாந்த், மிக எளிதாக 13-21, 13-21 என்ற கணக்கில் அவரிடம் வீழ்ந்தார்.

போராடிப் பார்த்த சிந்து
மற்றொருபுறம், பெண்கள் பிரிவில் முதல் ரேங்க்கில் இருக்கும் தைபெய் நாட்டின் டை ஸூ (Tai Tzu)வை சந்தித்தார், சிந்து. முதல் சுற்றை 15-21 என்ற நிலையில் இழந்த சிந்து, இரண்டாவது சுற்றில் கடும் போட்டி அளித்தார். கடைசி வரை, இருவரும் இழுபறியில் புள்ளிகளை பெற்று வர, இறுதியில் 21-
19 என்ற முன்னிலை பெற்று இரண்டாவது சுற்றை வென்றார். பின் சுதாரித்துக்கொண்ட ஸூ, மூன்றாவது சுற்றில் ஆதிக்கம் செலுத்தி 21-11 என்ற
கணக்கில் ஆட்டத்தை வென்றார்.

தொடரும் இந்தியாவின் சோகம்
இதுவரை இந்தியர்கள் எவரும் மலேசியா ஓபன் தொடரின் இறுதிப் போட்டி வரை சென்றதில்லை என்ற சோகம் மீண்டும் தொடர்கிறது. மறுபுறம், பாட்மிண்டனில் சீனா, ஜப்பான், தைபெய் ஆகிய நாடுகளின் ஆதிக்கம் தொடர்கிறது.


Click it and Unblock the Notifications