மக்காவ் ஓபன் பாட்மின்டன்: இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன்!
பீஜிங்: மக்காவ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.
சீனாவில், மக்காவ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் நடந்தது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலக தர வரிசையில் 11வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்துவும், 91வது ரேங்கிலுள்ள கிம் ஹியோ மின்-னும் மோதினர்.

தொடக்கம் முதலே ஆட்டத்தில் சிந்து ஆதிக்கம் செலுத்தினார். மொத்தம் 45 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில், 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக (2013-14) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்றிருந்த சிந்து தற்போது சாம்பியனாகி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளார். அரையிறுதியில் சீனாவின் பலம் வாய்ந்த வீராங்கனை யு சுன்-னை, கிம் ஹியோ தோற்கடித்து பைனலுக்கு வந்திருந்தார்.
எனவே சிந்துக்கு அவர் கடுமையான போட்டி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்கள் அவர் ஆக்ரோஷமாகவே விளையாடினார். ஆனால் அனுபவம்மிக்கவரான சிந்து, பதற்றப்படால் வெற்றியை வசப்படுத்தி விட்டார்.


Click it and Unblock the Notifications