ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் பிவி சிந்து மற்றும் எச்எஸ் பிரனாய் முன்னேறினர். பிறந்த நாளான இன்று, ஜப்பான் வீராங்கனையை வென்று கொண்டாடினார் சிந்து.
இந்தோனேஷியா ஓபன் பாட்மின்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ். பிரனாய் 21-23, 21-15, 21-13 என்ற கணக்கில் சீன தைபேயின் வாங்க் ட்சூ வீயை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். முதல் செட்டை இழந்த நிலையிலும் அடுத்த இரண்டு செட்களில் வேகத்தை காட்டி வென்றார் பிரனாய்.
ஆடவர் ஒற்றையரில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா அடுத்ததாக விளையாட உள்ளார். அதில் வென்றால், அவரும் காலிறுதிக்கு முன்னேறினார்.
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் அயா ஒகோரியை 21-17, 21-14 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு 2-வது சுற்றிலேயே வெளியேறிய சிந்து, தற்போது நல்ல பார்மில் உள்ளார்.
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிந்து, ஜப்பான் வீராங்கனையை மிகவும் சுலபமாக வென்றார். காலிறுதியில் சீனாவின் ஹீ பிங்ஜியோவை சந்திக்கிறார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெஹ்வால் 2-வது சுற்றில் சீனாவின் சென் யூபேயை சந்திக்கிறார். அதில் வென்றால் அவரும் காலிறுதிக்கு முன்னேறுவார்.