அடுத்த பட்டத்துக்கு சிந்து தயார்
டெல்லி: கொரிய ஓபன் பட்டம் வென்ற, இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து அடுத்ததாக ஜப்பான் ஓபன் போட்டியில் பட்டம் வெல்ல தயாராகிவிட்டார்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து இந்தாண்டில் இந்தியா ஓபனைத் தொடர்ந்து, கொரிய ஓபன் போட்டியிலும் பட்டம் வென்று புதிய சாதனையைப் படைத்தார். உலக சாம்பியன் போட்டியில் வெள்ளி வென்று அசத்தினார்.

அடுத்ததாக நாளை தகுதிச் சுற்று ஆட்டங்களுடன் துவங்கும் ஜப்பான் ஓபன் போட்டியில் களமிறங்குகிறார் சிந்து. கொரியா ஓபன் போட்டியில் காலிறுதியில் வென்ற ஜப்பானின் மினட்சு மிதானியை, முதல் சுற்றில் சந்திக்க உள்ளார் சிந்து.
உலக சாம்பியன் போட்டி பைனலில் ஜப்பானின் நோசோமி ஒகுகாராவிடம் கடுமையாக போராடி தோற்ற சிந்து, கொரியா ஓபன் பைனலில் ஒகுகாராவை வென்றார்.
தற்போது ஜப்பான் ஓபன் போட்டியில் தங்களுடைய முதல் சுற்றில் வென்றால், இருவரும் மீண்டும் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது.
சிந்துவைத் தவிர, சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த், கஷ்யப் ஆகியோரும் ஜப்பான் ஓபனில் களமிறங்குகின்றனர்.
தற்போது உலகத் தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் சிந்து, இதுவரை 326 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 227ல் வெற்றி, 99ல் தோல்வி அடைந்துள்ளார். இந்தாண்டில் இதுவரை, 32 போட்டிகளில் விளையாடி, 25ல் வெற்றி, 7ல் மட்டுமே தோல்வி கண்டுள்ளார். மிகச் சிறந்த பார்மில் உள்ள சிந்து, ஹாட்ரிக் பட்டம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Monday, September 18, 2017, 17:45 [IST]
Other articles published on Sep 18, 2017


Click it and Unblock the Notifications