உலக பேட்மிண்டனில் இந்தியாவுக்கு பதக்க நம்பிக்கை! காலிறுதியில் வென்று சிந்து சரித்திரம்!!
குவாங்சோங்: சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக காலிறுதிப் போட்டியில் வென்று சரித்திர சாதனை படைத்துள்ளார் சிந்து.
சீனாவின் குவாங்சோவ் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் சாய்னா, காஷ்யப் மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரமான சிந்து ஆகியோர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.
இதனால் உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லக் கூடும் என்ற நம்பிக்கை எழுந்தது. ஆனால் சாய்னாவு, காஷ்யப்பும் இன்றைய காலிறுதியில் தோல்வியைத் தழுவினர்.

அசத்திய சரித்திர சிந்து!
வளர்ந்து வரும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, நடப்பு சாம்பியனும் உலகின் 5-ம் தரநிலை வீராங்கனையுமான வான் யிகானை எதிர்கொண்டார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் 21-18, 23-21 என்ற செட்கணக்கில் சிந்து அசத்தலான வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தார். இன்று நடைபெற்ற காலிறுதியில் சீனாவின் வீராங்கனை வாங்க் ஷியனை 21-18, 21-17 வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
மூத்த வீரர் பிரகாஷ் படுகோனேவுக்குப் பின்னர் இப்படி அரை இறுதிப் போட்டிக்கு ஒற்றையர் பிரிவில் இடம்பிடித்திருக்கிறார் 18 வயதேயான நம்பிக்கை நாயகி சிந்து!!
சிந்துவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

சாய்னா நேவால்
இந்தப் போட்டியில் பை ஆர்டர் வாய்ப்பு பெற்று நேரடியாக 2-ம் சுற்றுக்கு தகுதி பெற்றார் சாய்னா. அவர் ரஷியாவின் ஒல்காவை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதியை உறுதி செய்வதற்கான ஆட்டத்தில் 13-ம் தரநிலையில் இருக்கும் தாய்லாந்தின் போர்ன்டிப்புடன் மோதினார் 3ம் நிலையில் இருக்கும் சாய்னா. இதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார் சாய்னா. ஆனால் காலிறுதியில் தென்கொரிய வீராங்கனையிடம் 21-23, 9-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

காஷ்யப்
மற்றொரு நட்சத்திரமான பருபள்ளி காஷ்யப் ஹாங்காங் வீரர் யுன் ஹியூவை 21-13, 21-16 என்ற செட்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் காஷ்யப், சீன வீரரிடம் 21-16, 20-22, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவி வெளியேறினார்.

இரட்டையர் பிரிவில் தோல்வி
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தருண் கோனா-அருண் விஷ்ணு ஜோடி 2வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது. இதனால் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.


Click it and Unblock the Notifications