
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் கலந்து கொண்டார். ஒற்றையர் பிரிவிற்கான போட்டியில் வெண்கலம் வென்று நாடு திரும்பிய சாய்னா நேவாலுக்கு, பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதை பாராட்டி அவருக்கு மத்திய, மாநில அரசுகள் விழா நடத்தி கெளரவப்படுத்தியது. இந்த நிலையில் இந்திய விமானப் படையில் உள்ள ஊழியர்கள் விடாமுயற்சியுடன் நாட்டிற்காக போராட வேண்டியதை உணர்த்தும் வகையில், சாய்னா நேவாலுடன் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஆந்திர மாநிலம் திண்டுக்குல் என்ற இடத்தில் உள்ள இந்திய விமான நிலைய அதிகாரிகள் பயிற்சி அகடமிக்கு, சாய்னா நேவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் பயிற்சி அகடமிக்கு செல்லும் சாய்னா நேவால், அகடமியில் உள்ள வீரர்களுடன் பாட்மிண்டன் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும் இந்திய விமான படையில் போருக்கு செல்லும் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் பயன்படுத்தப்படும் கிரன் எம்.கே.2 என்ற போர் விமானத்தில் சாய்னா நேவால் பயணிக்க உள்ளார்.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது,
இந்திய விமானப் படையில் பணியாற்றி வரும் இளம் ஊழியர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையி்ல், சாய்னா நேவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் வீரர்கள் கடினமாக உழைத்து தங்கள் பணியை சிறப்பாக செய்வதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய விமான படை இலக்கை அடைய முடியும்.
பயிற்சி அகடமியில் உள்ள வீரர்களுடன், சாய்னா நேவால் பாட்மிண்டன் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார் என்றனர்.
முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சினை சாதனைகளை பாராட்டும் வகையில், அவருக்கு இந்திய விமான படையில் கெளரவ கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சச்சின், டோணி ஆகியோரின் திறமையை பாராட்டி இந்திய விமான படையின் எஸ்.யூ.-30 எம்.கே.ஐ போர் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இருவரும் இதுவரை அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.