
பாட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீராங்கனைகள் மொத்தம் 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் வீராங்கனை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறுவர். இந்தியாவின் சாய்னா நேவால் இ' பிரிவில் இடம் பெற்றுள்ளார். அவர் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் சாப்ரினாவுடன் மோதி 21-9, 21-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். இ பிரிவில் எஞ்சியுள்ள பெல்ஜியத்தின் லினே டானை, சாய்னா இன்று எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் நுழைவார்.
குத்துச்சண்டை
குத்துச்சண்டையில் ஆண்களுக்கான லைட்வெயிட் பிரிவில் இந்தியாவின் ஜெய் பகவான், செசல்ஸ் வீரர் ஆன்ட்ரிக் அலிசோப்புடன் மோதினார். இதில் ஜெய் பகவான் 3 ரவுண்ட் முடிவில் 18-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் அவர் கஜகஸ்தானின் கானி ஜாய்லாவுடன் களம் காணுகிறார்.
மிடில் வெயிட் பிரிவில் (75 கிலோ) இந்தியாவின் விஜேந்தர் சிங், கஜகஸ்தானின் டனாபெக் சுகானோவுடன் மோதினார். இதில் 14-10 என்ற புள்ளி கணக்கில் விஜேந்தர் வெற்றியை எட்டினார். விஜேந்தர் வருகிற 2-ந்தேதி நடக்கும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் டெர்ரெல் கவுஷாவுடன் மோதுகிறார்.
துடுப்பு படகு இரட்டையர் பிரிவு
துடுப்பு படகு இரட்டையரில் இந்தியாவின் சந்தீப் குமார்-மன்ஜீத் சிங் ஜோடி தகுதி சுற்றில் 4-வது இடத்தை பெற்றது. இதையடுத்து பதக்க வாய்ப்பில் நீடிக்க அவர்களுக்கு ரெப்சாஜ்' மூலம் மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த சுற்று நாளை நடைபெறுகிறது.