குவாங்சோங்: சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் போட்டியின் அரை இறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து தாய்லாந்து வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இருப்பினும் உலக பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் உறுதியாகி இருப்பதால் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சிந்து.
சீனாவின் குவாங்சோவ் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் சாய்னா, காஷ்யப் மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரமான சிந்து ஆகியோர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.

ஆனால் சாய்னாவு, காஷ்யப்பும் நேற்றைய காலிறுதியில் தோல்வியைத் தழுவினர். இந்தியாவின் சிந்து காலிறுதியில் வென்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றார்.
இன்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் இந்தானானோவிடம் 10-21, 13-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
இருப்பினும் அரை இறுதியில் தோல்வி அடையும் இருவருக்குமே வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என்பது விதி. இதனால் சிந்துவுக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகி இருக்கிறது.
1983ஆம் ஆண்டு இந்தியாவின் பிரகாஷ் படுகோனே, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றிருந்தார். 2011ஆம் ஆண்டு பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜ்வாலா மற்றும் அஸ்வினி ஜோடியும் வெண்கலம் வென்றிருந்தது.
தற்போது சிந்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றுள்ளார். அதே நேரத்தில் உலக பேட்மிண்டன் மகளிர் பிரிவில் முதல் முறையாக பதக்கம் பெறும் இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் சிந்து பெற்றுள்ளார்.