
"இந்தியாவின் முதலாவது வீராங்கனை" என்ற பட்டத்தை பல முறை பெற்றவர் சாய்னா நேவால். தற்போது ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனில் இந்தியா சார்பில் அரை இறுதிக்கு முன்னேறியுள்ள முதலாவது இந்தியர் என்ற பெருமையையும் சாய்னா பெற்றிருக்கிறார். செக்கோஸ்லோவேகியாவில் 2003-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் ஓபன் போட்டியிலிருந்து தமது சர்வதேச போட்டிகளைத் தொடங்கிய சாய்னா 20க்கும் மேற்பட்ட முறை இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
சாய்னாவின் விறுவிறு ஆட்டங்கள்
நடப்பு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தொடக்கம் முதலே தமது முழுத்திறமையையும் சாய்னா வெளிப்படுத்தி வருகிறார். முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ஜக்யூட்டை எதிர்கொண்டு ஆடிய சாய்னா அபாரமாக விளையாடினார். 21-9, 21-4 என்ற புள்ளிகள் கணக்கில் சுவிட்சர்லாந்து வீராங்கனையை மிக எளிதாக தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா நேவால், பெல்ஜியத்தின் லினே டானுடன் மோதினார். இந்தப் போட்டியிலும் கூட சாய்னாவின் ஆட்டம் அபாரமாகவே இருந்தது! இந்த சுற்றில் முதல் செட்டை 21-4 என்ற கணக்கில் தம்வசப்படுத்தினார். 2-வது சுற்றை 14 நிமிடத்தில் 21-14 என்ற கணக்கில் தக்க வைத்தார். மொத்தம் 23 நிமிடத்திலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து காலிறுதிக்குள் நுழைந்தார் சாய்னார்!
காலிறுதியில் டென்மார்க் வீராங்கனை டினி பானுடன் சாய்னா மோதினார். நேற்றைய ஆட்டத்திலும் சரி சாய்னாவுக்கு டென்மார்க் வீராங்கனை நெருக்கடி கொடுத்தாலும் முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டில் பதற்றத்தை வெளிப்படுத்திய நிலையில் சாய்னா சில தவறுகளை செய்யப் போக டென்மாக் வீராங்கனை முன்னிலை பெற்றுக் கொண்டே வந்தார். எங்கே சாய்னா 2-வது செட்டை இழந்துவிடுவாரோ என்ற நிலையில் போராடிய சாய்னா 22-20 என்ற செட்டில் வென்று காட்டினார். இதன் மூலம் ஒலிம்பிக் அரை இறுதிக்குள் நுழைந்த முதலாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுவிட்டார்.
சவாலான அரைஇறுதியிலும் சாதித்து சாய்னா பதக்கத்தை இந்தியாவுக்கு நிச்சயம் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!