பாரீஸ்: பிரெஞ்ச் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால், நேற்று நடைபெற்ற 2வது சுற்று போட்டியில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
பிரெஞ்ச் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டியில் உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால், 27வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சப்ஸ்ரீ தாரத்தான்சாய் உடன் மோதினார்.

துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய சாய்னா நெஹ்வால் முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதேபோல 2வது சுற்றிலும் சாய்னா 21-13 என்ற கணக்கில் கைப்பற்றினார். மொத்தம் 37 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் சாய்னா நெஹ்வால் 21-16, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் தொடரின் காலிறுதி போட்டிக்கு சாய்னா தகுதி பெற்றார்.
காலிறுதி போட்டியில் சாய்னா, மற்றொரு தாய்லாந்து வீராங்கனையான ராட்சானோக் இன்டனோனுடன் மோத உள்ளார். மேலும் உலக பாட்மிண்டன் தரவரிசைப்பட்டியலில் இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால், ஒரு இடம் முன்னேறி தற்போது 3வது இடத்தை எட்டியுள்ளார்.