கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பேட்மின்டன் தொடரில் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், இந்திய வீராங்கனை சாய்னா நேவல் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில், மலேசிய ஓபன் பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், இந்தியாவின் சாய்னா நேவல், சிங்கப்பூரின் ஜூயன்குவை உள்ளிட்டோர் மோதினர்.
முதல் செட்டில் கடுமையாக போராடிய சாய்னா, 19-21 என்ற கணக்கில் இழந்தார். 2வது செட்டில் பதிலடி கொடுத்த சாய்னா 21-14 என்ற கணக்கில் ஜூயன்குவை வீழ்த்தினார். 3வது செட்டில் உற்சாகமடைந்த சாய்னா 21-15 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் 19-21, 21-14, 21-15 என்ற செட் கணக்கில் சாய்னா நேவல் வெற்றிப் பெற்றார்.
2வது சுற்றுக்கு முன்னேறியுள்ள சாய்னா நேவல், அடுத்தபடியாக சீனாவின் சாயோ சிங்க்கை எதிர் கொள்ள உள்ளார்.
அதேபோல கலப்பு இரட்டையர் பெண்கள் பிரிவில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திஜு, ஜுவாலா கட்டா ஜோடி சேர்ந்து, சிங்கப்பூரின் சாயுத் டிரையாசார்ட், லி யயோ ஜோடியுடன் மோதினர். இதில் இந்திய ஜோடி 21-13, 19-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி, டென்மார்க்கின் கிறிஸ்டியானா பெடர்சன், காமில்லா ரிட்டர் ஜூல் ஜோடியை எதிர்க் கொண்டது. இதில் 13-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் டென்மார்க் ஜோடி வெற்றி பெற்றது.
ஆண்களுக்கு தோல்வி:
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், இந்தியாவின் அஜய் ஜெயராம், இந்தோனேஷியாவின் சிம்மன் சான்டோசோவுடன் மோதினார். இதில் 21-9, 18-21, 16-21 என்ற செட் கணக்கில் சிம்மன் சான்டோசோ வெற்றி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில், இந்தியாவின் ருபேஷ் குமார், சனவே தாமஸ் ஜோடி, மலேசியாவின் கியன் கீட் கோ, பூன் ஹியாங் டான் ஜோடியை எதிர் கொண்டது. இதில் 14-21, 13-21 என்ற நேர் செட்டில் மலேசியா ஜோடி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் தொடரில் இருந்து வெளியேறினர்.