கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பேட்மின்டன் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவல் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
மலேசிய ஓபன் பேட்மின்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகின்றது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவல், சீன தைபேயின் ஷாவோ சீய் செங்க்கை எதிர் கொண்டார்.
உலக தர வரிசையில் 4வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவல், 31 நிமிடங்களில் 21-19, 21-8 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன் மூலம் சாய்னா கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று நடக்க உள்ள கால் இறுதிப் போட்டியில் சாய்னா நேவல், டென்மார்க்கின் டின் பான்னை சந்திக்க உள்ளார்.
கலப்பு இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-திஜூ ஜோடி தோல்வியை தழுவி, தொடரில் இருந்து வெளியேறியது.