
சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனவரி மாதம் 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. 'மீலாதுநபி'யையட்டி வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக இருப்பதால், இன்று அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்படுகிறது. இதேபோல், 26-ந் தேதி குடியரசு தினத்தன்று, நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்களில் வாக்காளர் உறுதி மொழி ஏற்கப்படும்.
சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா பேரணியில் தேசிய வாக்காளர் தினம் குறித்த ஒரு அலங்கார ரதம் இடம்பெறும். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள் சாய்னா நெவால், மேரிகோம் ஆகியோரை தேசிய விளம்பர தூதுவர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் பேசி வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையின் அவசியம் குறித்து இவர்கள் விவரிக்கும் விளம்பர படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது என்றார் அவர்.