
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால் பங்கேற்றார். இதில் சிறப்பாக ஆடிய சாய்னா வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், சீன வீராங்கனை ஜின் வாங் உடன் மோதினார். இதில் காயமடைந்த சீன வீராங்கனை போட்டியில் இருந்து விலகினார். இதனால் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் இந்திய பாட்மிண்டன் அணி இன்று அதிகாலையில் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியது. விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்த சாய்னாவுக்கு நூற்றுக்கணக்கனோர் திரண்டு வந்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்களை கண்டு புன்னகை நிறைந்த முகத்துடன் கை அசைத்தார் சாய்னா நேவால். அவருடன் பயிற்சியாளர் கோபிசந்த், தந்தை ஹர்வீர் சிங் ஆகியோரும் வந்தார். சாய்னா நேவாலுக்கு வாழ்த்து தெரிவிக்க அதிகளவிலான ரசிகர்கள் கூட்டம் காத்திருந்ததால், கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து மற்றொரு விமானம் மூலம் சாய்னா நேவால் தனது சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார்.
ஹைதராபாத் சென்ற சாய்னாவுக்கு அங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்ற தனிப்பட்ட போட்டிகளில் கடந்த 1952ம் ஆண்டு மல்யுத்த வீரர் கஷாபா ஜாதவ் வெண்கலப்பதக்கம் வென்றார். அந்த வரிசையில் சாய்னா நேவால் 10வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றுள்ளார்.