ரித்தி நிறுவனத்துடன் ரூ.40 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தில் சாய்னா நேவால்

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்பிறகு நாடு திரும்பிய அவருக்கு, பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பாராட்டு விழாக்களும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பிரபல விளையாட்டு மேலாண்மை நிறுவனமான ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம், சாய்னா நேவால் உடன் ரூ.40 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதன்மூலம் கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டு போட்டிகளில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனை என்ற புகழை சாய்னா பெற்றுள்ளார்.
புதிய ஒப்பந்தத்தின் மூலம் சாய்னா நேவாலின் விளம்பர ஒப்பந்தங்கள், போட்டோ, ஊடக உரிமை, விளம்பர பட உரிமை ஆகியவை தொடர்பான பணிகளை ரித்தி நிறுவனம் இனிமேல் கண்காணிக்கும்.
இது குறித்து சாய்னா நேவால் கூறியதாவது,
ரித்தி விளையாட்டு மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு விளையாட்டு வீராங்கனை தொடர்பான பணிகளை சிறப்பாக செய்வதில் ரித்தி நிறுவனம் பிரபலமானது. ரித்தி நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி தந்த இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் துணை தலைவர் வினோத் தவனுக்கு, எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இது குறித்து ரித்தி நிறுவனத்தின் தலைவர் அருண் பாண்டே கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சாய்னா நேவால், எங்களுடன் இணைந்து செயலாற்ற ஒப்பு கொண்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் பாட்மிண்டன் விளையாட்டின் வளர்ச்சியில் சாய்னா நேவால் பெரும் பங்காற்றி உள்ளார்.
பாட்மிண்டன் விளையாட்டிற்கான உலக வரைபடத்தில் இந்தியாவின் பெயரை சாய்னா உயர்த்தி காட்டியுள்ளார். எனவே அவரது வளர்ச்சிக்கு, எங்களால் முடிந்த உதவிகளை செய்ய உள்ளோம் என்றார்.
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, ஏற்கனவே ரித்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications