லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்றார். இதையடுத்து அவருக்கு ஹைதராபாத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், அவருக்கு பி.எம்.டபில்யூ சொகுசு காரை பரிசளித்தார்.
அதன்பிறகு பேசிய சச்சின், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதை எண்ணி சாய்னா மகிழ்ச்சி அடையலாம். ஆனால் அத்தோடு திருப்தி அடைய வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
இது குறித்து சச்சின் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் சாய்னா நேவால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் திருப்தி அடையமாட்டார். விளையாட்டு துறையில் உள்ள நாங்கள் எப்போதும், திருப்தி அடைய கூடாது. ஏனெனில் நாங்கள் அடைய வேண்டிய வெற்றி படிகள் ஏராளம். கோபிசந்த்தின் பயிற்சியின் மூலம் சாய்னா மேலும் பல சாதனை சிகரங்களை எட்டுவார்.
விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு, சிறப்பான எதிர்காலம் உள்ளது. எனவே நாம் அடுத்து ஆட வேண்டிய போட்டி தான் சிறந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். சாய்னா பல சாதனை சிகரங்களை எட்டி, சர்வதேச அளவில் புகழ் பெறுவார் என்று நான் நம்புகிறேன்.
சாய்னா நேவாலின் ஆட்டத்தில் நான் நடிப்பை பார்த்தது இல்லை. ஒரு பாட்மிண்டன் வீராங்கனையிடம் எதிர்பார்க்கப்படும் உண்மையான ஆட்டம் மட்டுமே அவர் வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வென்றதன் மூலம் அவரது பணி முடிந்து போகவில்லை. அவர் இன்னும் ஒரு சிறந்த வீராங்கனையாக செயலாற்ற வேண்டும்.
சாய்னாவின் உழைப்பு, கடின முயற்சி, அர்ப்பணம், கனவு ஆகியவற்றிற்கு பரிசாக, ஒலிம்பிக் பதக்கம் கிடைத்துள்ளது. மேலும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அனைவரும், இன்னும் அதிக சாதிக்க வேண்டியுள்ளது என்றார்.