
சீனாவில் உள்ள சங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11 முதல் 16ம் தேதி வரை லீ நிங் சைனா மாஸ்டர்ஸ் 2012 என்ற சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற உள்ளது. மேலும் ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் 18 முதல் 23ம் தேதி வரை யோனேக்ஸ் ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகளை பாராட்டும் வகையில் மும்பையில் விழா நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், பயிற்சியாளர் கோபிசந்த் உடன் கலந்து கொண்டார்.
அப்போது விழாவில் கலந்து கொண்ட இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், சீனாவில் நடைபெற உள்ள பாட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
சீனாவில் நடைபெற உள்ள சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில், சாய்னா நேவால் கலந்து கொள்ளமாட்டார். இவருக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுகிறது. சிறிது நாட்கள் ஓய்வுக்கு பிறகு, ஜப்பான் ஓபன் தொடரில் பங்கேற்க உள்ளார். இதற்காக சாய்னா நேவால் தயாராகி வருகிறார். சீனா தொடரில் இந்திய வீரரான பருபள்ளி காஷ்யப் கலந்து கொள்ள உள்ளார் என்றார்.