பிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் ஸ்ரீகாந்துக்கு சவால் விட்ட பிரனாய்
பாரிஸ்: சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் போட்டியான பிரெஞ்ச் ஓபன் போட்டியின் அரை இறுதியில் எச்.எஸ். பிரனாயின் கடுமையான சவாலை வென்று இறுதிக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பி.வி. சிந்து, வெளியேறினார்.
சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் பாரிஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில் நேற்று இரவு நடந்த அரை இறுதிப் போட்டியில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தும், எச்.எஸ்.பிரனாயும் மோதினர். மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், கோபிசந்த் அகாதெமியின் மாணவர்களான இருவரும் குருவின் பெருமையை நிலைநாட்டும் வகையில் அபாரமாக விளையாடினர்.

நீயா, நானா என்ற இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்துக்கு பிரனாய் கடும் சவால் கொடுத்தார். முதல் செட்டில் 14-21 என்ற பிரனாய் வென்றார். அடுத்த இரண்டு செட்களில் ஸ்ரீகாந்த் 21-19, 21-18 என்ற கணக்கில் வென்றாலும், கடைசி நிமிடம் வரை பிரனாய் கடும் சவால் கொடுத்தார்.
5வது பைனலில் ஸ்ரீகாந்த்
இதன் மூலம், இந்த ஆண்டில், 5வது சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் போட்டியின் பைனலுக்கு ஸ்ரீகாந்த் முன்னேறினார். இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் பட்டங்களை வென்றுள்ள அவர், இந்த ஆண்டில் நான்காவது பட்டம் வெல்லத் தயாராக உள்ளார்.
பைனலில் ஜப்பானின் கென்டா நிஷிமோடாவை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த். இதற்கு முன்பு இருவரும் ஒரு முறை களத்தில் சந்தித்துள்ளனர். அதில் ஸ்ரீகாந்த் வென்றார்.
இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பி.வி. சிந்து, அரை இறுதியில் ஜப்பானின் அகேனே யாமகூச்சியிடம் 21-14, 21-9 என்ற செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.
Story first published: Sunday, October 29, 2017, 15:42 [IST]
Other articles published on Oct 29, 2017


Click it and Unblock the Notifications