ஹைதராபாத்: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் அளவுக்கு பி.வி.சிந்து, உரிய பயிற்சி அளிக்கப்படும் என்று தெலுங்கானா துணை முதல்வர் முகம்மது மஹ்மூத் அலி கூறியிருப்பதன் மூலம், அவர் கோபிசந்தின் பயிற்சி அகாடமியை குறைந்து மதிப்பிட்டு விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பழமையானதாகிவிட்டதால், ஹைதராபாத்திலுள்ள புகழ் பெற்ற சார்மினார் கட்டிடத்தை இடிக்க வேண்டிவரும் என்று கூறியதால், ஏற்கனவே, சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர்.
பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று அசத்தினார். இறுதி போட்டியில் முதல் கேமை வென்றபோதும், அடுத்த 2 கேம்களும் கை நழுவியதால் தங்கம் வெல்லும் வாய்ப்பை சிந்து இழந்தார்.

மகளிர் பேட்மின்டனில் இந்திய வீராங்கனை வென்ற முதல் வெள்ளி இதுதான் என்பது சிறப்பு. சிந்து வெற்றிக்கு பின்னால் இருப்பது அவரின் பயிற்சியாளர் கோபிசந்த் என அனைவரும் கொண்டாடுகிறார்கள்.
சொந்த ஊரான ஹைதராபாத் திரும்பிய சிந்துவிற்கு மட்டுமின்றி கோபிசந்திற்கும் ரசிகர்கள் இன்று உற்சாக வரவேற்பு அளித்து அலங்கரிக்கப்பட்ட திறந்த பஸ்சில் வெற்றி ஊர்வலம் நடத்தினர். இதையடுத்து கச்சிபவுலி மைதானத்தில் பிரமாண்ட பாராட்டு விழாவும் நடைபெற்றது.
இதனிடையே, துணை முதல்வர் முகமது மஹ்மூத் அலி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "சிந்துவிற்கு சரியான பயிற்சியளிக்கப்படும். அடுத்த முறை அவர் தங்கம் வெல்ல இந்த பயிற்சி உதவும்" என கூறியுள்ளார். இவரது பேட்டி சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
கோபிசந்த் ஆந்திராவை சேர்ந்தவர். ஏற்கனவே சிந்து, ஆந்திராவுக்கு சொந்தமா, தெலுங்கானாவுக்கு சொந்தமா என குடுமிபிடி சண்டை நடக்கிறது. தெலுங்கானா அவரை தங்கள் மாநில மகளாகவே கருதுகிறது. எனவேதான் கோபிச்சந்த்துக்கு, தெலுங்கானா துணை முதல்வர் மறைமுகமாக குட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.