ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் பாட்மின்டனில் சிந்துவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது அவரின் கடின உழைப்பிற்கும் பயிற்சிக்கும் கிடைத்த பரிசு என சிந்துவை உலக அரங்கில் உயர்திய அவரது பயிற்சியாளர் கோபிசந்த் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார் பி.வி சிந்து. 1995ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பிறந்த பிவி சிந்து தன்னுடைய 8 வயதில் பேட்மிண்டன் விளையாட்டை தொடங்கியவர்.
இந்தியாவின் பதக்க கனவை பிவி சிந்து உயிர்பெற செய்து உள்ளார். போட்டியில் பி.வி. சிந்து காட்டிய அபாரம் குறித்து அவருடைய பயிற்சியாளர் கோபிசந்த் பேசுகையில், "சிந்து ஒருபோதும் விடுவது கிடையாது, அதுவே அவருடைய சிறப்பு என்று குறிப்பிட்டு உள்ளார்.
கடும் சவால்
இறுதிப் போட்டி மிகவும் கடினமாக சென்றது. வெற்றி யாருக்கு கிடைக்கும் என எளிதில் சொல்ல முடியாது அளவிற்கு இருந்தது. தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள கரோலினா மிகவும் சவாலாக ஆடினார். அவரை எதிர்கொண்ட சிந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பாக ஆடினார்.
உழைப்பிற்கு கிடைத்த பரிசு
பைனலில் வெற்றி பெற முடியவில்லை என்றபோதும், சிந்து வெள்ளி வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்காக சிந்து எடுத்து வந்த கடும் பயிற்சிக்கும் உழைப்பிற்கும் கிடைத்த பரிசாக வெள்ளிப் பதக்கத்தை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
கோபிசந்த்
பி.வி.சிந்து ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிந்து வெள்ளி வெல்வதற்கு கோபிசந்தின் பயிற்சியும் ஊக்கமும் முக்கிய காரணம் என்பதை மறுக்கவே முடியாது. பேட்மிண்டன் வீரராக விளையாட்டிற்காக தன்னை அர்பணித்துக்கொண்ட கோபிசந்த் சமூக அக்கறையுள்ள மனிதனாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.
துரோணாச்சாரியா
இந்திய பேட்மிண்டன் வீரர் வீராங்கனைகளை உருவாக்கிய தலைமைப் பயிற்சியாளரான கோபிசந்த் உருவாக்கிய பேட்மின்டன் அகாடமியில் பயிற்சிபெற்ற சாய்னா நேவால், பிவி சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகியோர் உலக அளவில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர்கள்.
கடும் பயிற்சி
1991ஆம் ஆண்டு முதல் பேட்மிண்டன் வீரராக தனது பயணத்தைத் தொடங்கினார் கோபிசந்த். தொடக்கத்தில் பிரகாஷ் படுகோன் என்ற முன்னாள் பேட்மிண்டன் வீரரிடம் பயற்சி பெற்றார். கோபிசந்த்தின் தாயார் கடன்வாங்கி அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.
இந்தியாவிற்கு பெருமை
கடுமையான பயிற்சி கிடைத்த முதல் பலனாக, 1996ஆம் ஆண்டு சார்க் பேட்மிண்டன் தொடரில் தங்கம் வென்றார். 1998ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
1999ஆம் ஆண்டு பிரான்ஸ், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற தொடரை வென்று திரும்பினார்.
உலகத்தரவரிசை
2001ஆம் ஆண்டு இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் முதலிடம் பிடித்து சாதித்தார். அடுத்தடுத்த வெற்றிகளின் பிரதிபலிப்பாக கோபிசந்த் உலக தரவரிசையில் 5வது இடத்துக்கு உயர்ந்தார்.
பேட்மிண்டன் அகாடமி
2003ஆம் ஆண்டு தனது 30 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்த கோபிசந்த் உலகத்தரம் வாய்ந்த பேட்மிண்டன் அகாடமி ஒன்றை அமைத்து எதிர்கால இந்திய பேட்மிண்டன் அணியை உருவாக்க வேண்டும் என்று உறுதி எடுத்தார்
கனவை நனவாக்கினார்
அவருக்கு ஆதரவு அளித்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மானிய விலையில் அகாடமிக்கான நிலத்தை அளிப்பதற்கு வழிசெய்தார். 2008ம் ஆண்டு தன் வீட்டை விற்று, தான் நினைத்தபடியே உலகத்தரமான 'கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமி'யை கட்டி முடித்தார் கோபிசந்த்.
உலகத்தரத்தில் பயிற்சிக் களம்
25 லட்சம் டாலர் மதிப்பில் அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக உருவான இந்த அகாடமியில் 2010ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிக்கு இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு இந்த அகாடமியில் தான் பயிற்சியளிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டின் இந்திய ஓப்பன் பேட்மிண்டன் போட்டிகளும் இங்கு நடைபெற்றுள்ளன.
வீரர்களுக்குப் பயிற்சி
கோபிசந்த் தான் விளையாடிய காலத்தில் வெற்றியை நோக்கிய தன் தீராத முயற்சியால் படிப்படியாக உயர்ந்தார். தான் விரும்பும் பேட்மிண்டன் விளையாட்டின் மீது கொண்ட விருப்பத்தை பெரும் கனவாகக் கொண்டு, ஓய்வுக்குப் பிறகும் பல வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சியளித்து உருவாக்கி வருகிறார்.