ஜகார்த்தா : இந்திய பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து இருவரும் ஆசிய விளையாட்டில் அரையிறுதிக்கு முன்னேறினர். அந்த அரையிறுதியின் முடிவில் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். சாய்னா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
ஆசிய விளையாட்டில் இந்தியா பாட்மிண்டன் அணிப் பிரிவில் தோல்வி அடைந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் வெளியேறியது. இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து அரையிறுதி வரை முன்னேறி இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்களை உறுதி செய்தனர்.

சாய்னா நேவால் அரையிறுதியில் சீன தைபெய்-இன் டாய் சூ-வை சந்தித்தார்.அதில் தோல்வி அடைந்து, வெண்கலம் மட்டும் வென்று ஆறுதலடைந்தார். இதில் முக்கியமாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் சுமார் 36 ஆண்டுகள் கழித்து இந்தியா பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.வி.சிந்து ஜப்பானின் யாமாகுச்சி-ஐ அரையிறுதியில் சந்தித்தார். அந்த போட்டியில் சிந்து 21-17, 15-21, 21-10 என்ற கேம்களில் வெற்றி பெற்றார். இதனால், சிந்து இறுதிக்கு முன்னேறி, தங்கம் அல்லது வெள்ளி வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இறுதியில், சாய்னாவை வீழ்த்திய சீன தைபெய் நாட்டின் சூயிங்-ஐ சந்திக்கிறார் சிந்து. அதில் வெல்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.