13 வயது சிறுவன் மரணம்
அனுச்சா தாசாகோ என்ற 13 வயது சிறுவன் குத்துச்சண்டை போட்டியில் தன்னைப் போன்ற மற்றொரு சிறுவனை எதிர்த்து சண்டையிட்டான். அந்த போட்டியில் தலையில் பலத்த அடி வாங்கிய அனுச்சா இறந்துவிட்டான். இந்த சிறுவனின் மரணம் சிறுவர்கள் குத்துச்சண்டைக்கு தாய்லாந்து பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
170 குத்துச்சண்டை போட்டிகள்
அனுச்சா தனது எட்டு வயதில் இருந்து குத்துச்சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை 170 போட்டிகளில் பங்கேற்று இருப்பதாகவும் வரும் செய்தியை பார்த்தால் நமக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. இந்த சிறுவனைப் போல இன்னும் ஏராளமான சிறுவர்கள் அங்கே இந்த ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
கவசம் இல்லாமல் மோதல்
இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் எந்த கவசமும் இன்றி இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட மரணம் நிகழ்ந்த போட்டியிலும் இரண்டு சிறுவர்களும் எந்த தலைக்கவசமும் அணியவில்லை என தெரியவந்துள்ளது. அதன் காரணமாகவே அனுச்சா மரணம் நேர்ந்துள்ளது என பொதுமக்கள் கூறுகிறார்கள்.
சட்டம் எங்கே போச்சு?
குத்துச்சண்டையில் ஈடுபட்டால் பணம் கிடைக்கும் என்ற காரணத்தால் சிறுவர்களை பெற்றோர்கள் ஈடுபடுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அரசாங்கம் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கக் கூடாது என ஒரு சட்டத்தை பற்றி நீண்ட காலமாக பேசிக் கொண்டு இருக்கிறது. அது இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்த சம்பவத்துக்கு பின் விரைவில் அந்த சட்டம் இயற்றப்படும் என கூறி இருக்கிறார் தாய்லாந்து நாட்டு அமைச்சர்.