டெல்லி: காமன்வெல்த் போட்டியில் ஆறு பதக்கங்களை அள்ளிய இந்திய குத்துச் சண்டை வீரர்களுக்கு 1 மில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்பான்சர்கள் கிடைத்துள்ளன.காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீரர்கள் அபாரமாக விளையாடி ஆறு தங்கப் பதக்கங்களை அள்ளினர். இதையடுத்து குத்துச் சண்டை வீரர்களுக்கு ஸ்பான்சர் அளிக்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதில் முக்கியமான நிறுவனம் மானட் ஸ்டீல் குழுமம். இந்த நிறுவனம் இந்திய குத்துச் சண்டை வீரர்களுக்கு 1 மில்லியன் டாலர் ஸ்பான்சர் தொகை தர முன்வந்து அதற்கான ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளது.இது தவிர பெர்சப்ட் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் சுரஞ்சய், ஜெய், திணேஷ் குமார், பல்வீந்தர் சிங் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் இது. ஏற்கனவே இந்திய குத்துச் சண்டை சூப்பர் ஸ்டார் விஜேந்தர் சிங்குக்கு இதுதான் ஸ்பான்சர் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வீந்தர் சிங், விஜேந்தர் சிங்கின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.19 வயதான பல்வீந்தர் சிங், காமன்வெல்த் போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தாலும் கூட நல்ல திறமையுடையவர் என்பதால் அவருக்கு ஸ்பான்சர் அளித்து ஊக்கமளிக்க பெர்சப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.இந்த ஸ்பான்சர் மழை குறித்து இந்திய குத்துச் சண்டை அணியின் பயிற்சியாளர் குர்பக்ஸ் சிங் சந்து கூறுகையில், இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சந்தோஷமான தருணம் இது என்றார்.இதுதவிர தங்கப் பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ. 25,000 பரிசுத் தொகையையும் பெர்சப்ட் நிறுவனம் அளித்துள்ளது.