காமன்வெல்த் விளையாட்டு 2026: களமிறங்குவதற்கு முன்பே முதல் பதக்கத்தை உறுதி செய்த இந்தியாவின் லவ்வினா
கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் களம் இறங்குவதற்கு முன்பே தனக்கான பதக்கத்தை உறுதி செய்துள்ளார். மகளிர் 75 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் லவ்லினாவிற்கு முதல் சுற்றில் பை கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளின் குத்துச்சண்டை விதிகளின்படி, அரையிறுதிக்கு முன்னேறும் அனைத்து வீரர்களுக்கும் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதி செய்யப்படும். இதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 28 வயதான லவ்லினா, தனது பதக்கப் பட்டியலில் இதுவரை இல்லாத ஒரு முக்கிய பதக்கத்தை தற்போதே உறுதி செய்துள்ளார்.

இந்த எடைப் பிரிவில் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்பதால், லவ்லினா இப்போது தங்கப் பதக்கத்தை வெல்வதையே தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளார். கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள 23-வது காமன்வெல்த் போட்டிகள் 10 விளையாட்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தியாவிற்கு அதிக பதக்கங்களை பெற்றுத் தரும் முக்கிய விளையாட்டாக குத்துச்சண்டை கருதப்படுகிறது.
இம்முறை இந்தியாவின் எட்டு குத்துச்சண்டை வீரர்கள் முதல் சுற்றில் விளையாடாமல் அடுத்த சுற்றுக்கு நேரடியாக முன்னேறும் பை பெற்றுள்ளனர். அவர்களில் 57 கிலோ எடை பிரிவில் ஜெய்ஸ்மின் லம்போரியா, 60 கிலோ எடை பிரிவில் பிரியா கங்காஸ் மற்றும் 54 கிலோ எடை பிரிவில் பிரீத்தி பவார் ஆகியோர் தங்களது பதக்கங்களை உறுதி செய்ய இன்னும் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற வேண்டும்.
கடந்த பர்மிங்காம் போட்டிகளில் இந்திய மகளிர் அணி இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. இம்முறை இந்தியாவின் 7 பேர் கொண்ட மகளிர் அணி அந்த சாதனையை சமன் செய்ய அல்லது அதைவிட சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வலுவான நிலையில் உள்ளது. அண்மையில் உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்துள்ள உலக சாம்பியன் ஜெய்ஸ்மின் 57 கிலோ எடை பிரிவில் லம்போரியா , இந்தியாவின் முக்கிய பதக்க நம்பிக்கையாக உள்ளார். பர்மிங்காமில் வெண்கலம் வென்ற அவர், இம்முறை பதக்கத்தின் நிறத்தை மாற்றப் போராடுவார்.
மேலும், 54 கிலோ பிரிவில் இருந்து 51 கிலோ பிரிவிற்கு மாறியுள்ள ராணுவ குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி சவுத்ரி மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தகுதிச் சுற்றில் உலக சாம்பியன்களான நிகாத் ஜரீன் மற்றும் மீனாட்சி ஹூடாவை வீழ்த்தி இவர் தனது இடத்தை உறுதி செய்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற 54 கிலோ பிரிவில் பிரீத்தி 54 கிலோ மற்றும் 70 கிலோ பிரிவில் அருந்ததி சவுத்ரி ஆகியோரின் அண்மைக்கால ஆசிய சாம்பியன்ஷிப் பட்டங்கள் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளை மேலும் பலப்படுத்துகின்றன.
மறுபுறம், இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணி ஒரு மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது.. தேர்வு செய்யப்பட்டுள்ள ஏழு வீரர்களில் ஆறு பேர் தங்களது முதல் காமன்வெல்த் போட்டியில் களம் காணுகின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற 90 கிலோ பிரிவில் நரேந்தர் பெர்வால் மற்றும் 70 கிலோ பிரிவில் சுமித் குண்டு மட்டுமே சர்வதேச அளவில் அதிக அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவர்.


Click it and Unblock the Notifications
