முதல் முறை இந்தியாவிற்கு வரும் மைக் டைசன்...ஆனா சண்டை போட மாட்டார்
மும்பை : உலக அளவில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முதல் முறையாக இந்தியா வர இருக்கிறார். மும்பையில் நடக்க உள்ள ஒரு தற்காப்புக் கலை போட்டியை நேரில் காண உள்ளார். ஆனால், அவர் எந்த போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
இந்தியாவில் குமைட் 1 லீக் என்ற பெயரில் கலப்பு தற்காப்புக் கலை (Mixed Martial Arts) போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த லீக் தொடரை ஊக்குவிக்கும் வகையில் மைக் டைசன் இந்தியா வர உள்ளார் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த லீக் இந்திய கலப்பு தற்காப்புக் கலை அமைப்பாலும், உலக கிக்பாக்சிங் கூட்டமைப்பாலும் ஆதரிக்கப்பட்டுள்ளது. இந்த லீக் தொடர் இப்போதுதான் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இதை பிரபலப்படுத்தும் நோக்கில் தான் மைக் டைசன் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த லீகை நடத்த உள்ள புத்வாணி கூறுகையில், "டைசன் இந்த தொடரின் வழிகாட்டியாக செயல்படுவார். தற்காப்புக் கலை இப்போது ஒரு விளையாட்டாக மாறியுள்ளது. இதில் இன்னும் பிரபலமானவர்கள் வரவில்லை. எங்களுக்கு ஒரு பிரபலமான முகம் தேவைப்பட்டது. சண்டைக் கலையில் முகம்மது அலிக்கு பின், மைக் டைசன் தான் சிறந்த வீரர். அதனால், அவரை அழைத்து வந்துள்ளோம்" என தெரிவித்தார்.
இந்த லீகில் எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணியிலும் 9 வீரர்கள் இருப்பார்கள். அதில் இரண்டு பேர் பெண்களாக இருப்பார்கள். பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களை கொண்டு இந்த தொடரை நடத்த இருக்கிறார்கள். குமைட் 1 லீக், செப்டம்பர் 29 முதல் தொடங்க உள்ளது.


Click it and Unblock the Notifications