இந்திய அணிக்கு ஆப்பு வைக்கப் போறதே அவர்தான்.. மிடில் ஆர்டரில் பெரிய ஓட்டை.. எச்சரித்த வாசிம் அக்ரம்
மும்பை : 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடி வரும் நிலையில் ஒரு வீரர் மட்டுமே அணியின் பலவீனமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து தான் வாசிம் அக்ரம் இப்படி கூறி இருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் முக்கியமான நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக உலகக்கோப்பை தொடருக்கு முன் உறுதி செய்யப்பட்டார். ஆனால், இதுவரை அவர் 134 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். அதன் பேட்டிங் சராசரி 33.5 மட்டுமே. அவர் ஆறு போட்டிகளில் எடுத்த ரன்கள் 0, 25, 53, 19, 33 மற்றும் 4.
இதில் எந்த ஒரு போட்டியிலும் அவர் எடுத்த ரன்களால் தான் இந்தியா வெற்றி பெற்றது எனக் கூற முடியாது. அவர் அடித்த அரைசதம் கூட ரோஹித் சர்மா, விராட் கோலி அமைத்த அடித்தளத்தில் அவர் எடுத்த ரன்கள் தான். அந்த போட்டியில் அவர்கள் ஸ்ரேயாஸ் ஐயரை விட அதிக ரன்கள் எடுத்து இருந்தனர்.

இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருமே இதுவரை நடந்த ஆறு போட்டிகளில் ஏதோ ஒரு தருணத்தில் வெற்றிக்கான பங்களிப்பை அளித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் போட்டியை மாற்றிய தருணம் என சொல்ல ஒரு விஷயமாவது உள்ளது.
ஆனால், இந்த போட்டியில் இந்த திருப்புமுனையை ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்படுத்தினார் என சொல்ல எந்த விஷயமும் இல்லை. பேட்டிங்கில் அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் வாசிம் அக்ரம் அவர் தான் அணியின் பலவீனம், அவர் சரியாக ஆடாவிட்டால் மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கும். எனவே, அவருக்கு பதில் இஷான் கிஷனை நான்காம் வரிசையில் ஆட வைக்கலாம் எனக் கூறி இருக்கிறார்.
வாசிம் அக்ரம் இது பற்றி கூறுகையில், "ஸ்ரேயாஸ் ஐயர் சரியாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இஷான் கிஷன் வெளியே அமர்ந்து இருப்பதையும்,. அவர் ஒரு இடது கை ஆட்டக்காரர் என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும். ஆசிய கோப்பையில் முதல் போட்டியில் இஷான் கிஷன் ஆடியதை யோசித்துப் பாருங்கள். அவரும், பாண்டியாவும் அமைத்த அந்த பார்ட்னர்ஷிப் சிறப்பானது. அவர் நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்." என்றார்.


Click it and Unblock the Notifications