ஒலிம்பிக்கிற்கு தேர்வு
குத்துச்சண்டையில் 5 முறை ஆசிய கோப்பையை வென்றவர் மேரி கோம். மேலும் காமன் வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றவர். கடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மேரி கோம், தற்போது டோக்கியோவில் வரும் ஜூலை -ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தேர்வாகியுள்ளார்.
ஒலிம்பிக்கிற்கு தேர்வு
இந்நிலையில் ஜோர்டனில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று ஒலிம்பிக்கிற்கு இந்தியா சார்பில் இரண்டாவது நபராக தேர்வாகியுள்ளார் மேரி கோம். இதையடுத்து இந்தியா திரும்பிய அவர், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
மேரிகோம் மகிழ்ச்சி
தான் தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தில் தனக்கு நல்ல சுதந்திரம் கிடைத்ததாகவும், ரிலாஸ்டாக தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் மேரி கோம் கூறியுள்ளார். தன்னுடைய பிட்னசில் கவனம் செலுத்த நேரம் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் இத்தகைய செயல்களை செய்ய முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
குழந்தைகளின் அப்பாவி கேள்வி
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் சுதந்திரமாக விளையாடி கொண்டிருக்கும் தன்னுடைய குழந்தைகள், இதேபோல கொரோனா தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தன்னிடம் அப்பாவித்தனமாக கூறுவதாகவும், ஆனால் கொரோனாவின் பாதிப்பை தான் அதிகமாக உணர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து கூற மறுப்பு
ஒலிம்பிக் போட்டிகள் ரத்து அல்லது ஒத்திவைக்கப்படும் என்று தான் கருதவில்லை என்றும், இத்தகைய பெரிய தொடரை அவ்வாறெல்லாம் செய்யப்பட முடியாது என்றும் கூறிய மேரிகோம் அது நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அது தன் கைகளில் இல்லை என்றும் அதுகுறித்து தான் அதிகமாக பேச விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.