மும்பை: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஓய்வு குறித்த தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்று வெண்கலம் வென்று சாதனை படைத்தவர் மேரி கோம். அதுமட்டுமல்லாமல் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவர். அதேபோல் 2014 ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியவர் மேரி கோம் தான்.

18 வயதில் தொடங்கிய குத்துச்சண்டை பயணம், தொடக்கத்திலேயே சிறப்பாக அமைந்தது. ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று பலரின் கவனத்தையும் ஈர்த்தார். 2005, 2006 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற அவர், திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சில காலம் குத்துச்சண்டையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் இரட்டை குழந்தைகளுக்கு தாயான அவர், மீண்டும் குத்துச்சண்டை பக்கம் திரும்பியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேரி கோமின் கதை முடிந்ததாக நினைத்த பலரும், கம்பேக் தொடரிலேயே அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இந்திய அளவில் மகளிர் குத்துச்சண்டை போட்டிகளுக்கான முகமாக இருந்து வந்த மேரி கோம் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அண்மையில் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் சார்பாக 40 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று புதிய விதிகள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மேரி கோம், குத்துச்சண்டை மீதான ஆர்வம் எனக்கு இப்போதும் குறையவில்லை. ஆனால் வயது வரம்பு குறித்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் 40 வயது வரை இருப்பவர்களால் மட்டுமே குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க முடியும். இதனால் ஓய்வை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். அதனால் ஓய்வை அறிவிக்கிறேன் என்று கூறினார். 41 வயதாகியுள்ளதால், மேரி கோம் இனி குத்துச்சண்டை போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தான் ஓய்வை அறிவிக்கவில்லை என்று மேரி கோம் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மேரி கோம் பேசுகையில், நான் இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை நான் ஓய்வை அறிவிக்க விரும்பினால், ஊடகங்கள் முன் நிச்சயம் நேரடியாக தோன்றி அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த மேரி கோம், திடீரென ஓய்வு குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.