டெக்சாஸ்: உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் மீண்டும் ஜேக் பால் என்ற குத்துச்சண்டை வீரருடன் தொழில்முறை போட்டியில் விளையாட இருக்கிறார். அந்தப் போட்டி இன்று அமெரிக்காவில் உள்ள ஆர்லிங்டன் நகரில் நடைபெற உள்ளது.
58 வயதான மைக் டைசன், 27 வயதான ஜேக் பால்-உடன் மோதுவதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டி உள்ளது. இந்த போட்டிக்கான சிறப்பு டிக்கெட் ஒன்றின் விலை மட்டுமே இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. இந்திய மதிப்புப்படி பார்த்தால் சுமார் 17 கோடி ஆகும்.

இந்த சிறப்பு டிக்கெட்டை வாங்குபவர் இரண்டு இருக்கை கொண்ட சோபா ஒன்றில் மிகவும் நெருக்கமாக அமர்ந்து போட்டியை காணலாம். போட்டி நடக்கும் மேடைக்கும், இந்த இருக்கைக்கும் 6 அடி மட்டுமே இடைவெளி இருக்கும் என கூறப்படுகிறது. இது மட்டும் இன்றி மேலும் பல சிறப்பு சலுகைகளும் உண்டு.
இந்த டிக்கெட்டை வாங்குபவர்கள் மைக் டைசன் மற்றும் ஜேக் பாலின் எடை சரிபார்ப்பின் போது அவர்கள் அருகில் நிற்கலாம். மேலும், போட்டிக்கு முன் மைக் டைசன் மற்றும் ஜேக் பால் ஆகியோரின் அறைக்கு சென்று அவர்களை சந்திக்கலாம். மேடையில் அவர்கள் ஏறிய பின் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். போட்டி முடிந்த பின்னரும் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், அவர்கள் இருவரும் கையெழுத்திட்ட குத்துச் சண்டை கையுறைகளை பெறலாம். இதைத் தவிர்த்து முதல் வரிசையில் எட்டு இருக்கைகளும் அவர்களுக்கு அளிக்கப்படும். இந்த 17 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட டிக்கெட்டை அமெரிக்காவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வாங்கி இருக்கிறார். "டார்க்லா" (TorkLaw) என்ற சட்ட நிறுவனத்தை சேர்ந்த கோரோஷ் டார்க்ஜாடே என்பவர் இந்த டிக்கெட்டை வாங்கி இருக்கிறார்.
இந்த ஒரு டிக்கெட் மட்டுமே அதிக விலைக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மற்ற டிக்கெட்டுகள் 55 டாலர் முதல் 5,000 டாலர் வரை விற்கப்படுகிறது. இந்திய மதிப்புப் படி 4,600 முதல் 4,22,000 வரை மற்ற டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த போட்டி நடைபெற உள்ள ஆர்லிங்டன் மைதானத்தில் மொத்தம் 80,000 இருக்கைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.