
சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் கூடிய சர்வதேச கழகத்தின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்திய குத்துச் சண்டை சங்கத்தை, சஸ்பெண்ட் செய்ய முடிவெடுக்கப்படுகிறது. மேலும் இந்த சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவரின் அரசியல் பின்னணிகள், குத்துச் சண்டை சங்கத்திற்கு நடந்த தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குத்துச் சண்டை சங்கத்தின் தலைவராக இருந்தவர் அபய் சிங் செளதாலா. இவர்தான் சமீபத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செளதாலா தலைவராக இருந்த குத்துச் சண்டை சங்கத்திற்கும் சஸ்பென்சன் வந்துள்ளது இந்திய விளையாட்டுத்துறையினரை அதிர வைத்துள்ளது.
இந்த நீக்கத்திற்கு இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது கடும் அதிருப்தி அளிக்கிறது, ஏமாற்றமாக இருக்கிறது. இந்திய விளையாட்டுக்கு இது மோசமான காலகட்டம் என்றார்.
இந்திய குத்துச் சண்டை சங்கத்திற்குப் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபிஷேக் மடோரியா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் கேட்ட அனைத்துத் தகவல்களையும் அனுப்பி வைத்தோம். ஆனால் அதையெல்லாம் பெற்ற பிறகும் கூட சஸ்பெண்ட் செய்துள்ளனர் என்றார்.