
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை அணியில் மொத்தம் 7 வீரர்களும், 1 வீராங்கனையும் இடம் பெற்று இருந்தனர். இதில் இந்திய வீராங்கனை மேரி கோம் வெண்கலப்பதக்கம் பெற்று ஆறுதல் அளித்தார். இந்த நிலையில் ஆண்கள் பிரிவில் இந்தியாவிற்கு பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய வீரர் சுமித் சங்வான் பங்கேற்ற போட்டியில் புள்ளிகள் சரியாக வழங்கப்படாமல் தோல்வியை தழுவினார். அதன்பிறகு அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக, முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், பிறகு தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். மற்றொரு இந்திய வீரரான மனோஜ் குமாருக்கும் புள்ளிகள் சரியாக வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று 49 கிலோ எடை பிரிவின்(லைட் பிளை வெயிட்) காலிறுதி போட்டியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங், அயர்லாந்து வீரர் பேடி பார்னஸை எதிர் கொண்டார். முதல் சுற்றில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அயர்லாந்து வீரர் முன்னிலை பெற்றார். இதனால் 2வது சுற்றில் ஆக்ரோஷமாக செயல்பட்ட தேவேந்திரோ சிங், அயர்லாந்து வீரரை தலையால் மோதினார். இதனால் தேவேந்திரோ சிங் விதிமுறைகளை மீறியதாக, அயர்லாந்து வீரருக்கு 2 போனஸ் புள்ளிகள் அளிக்கப்பட்டது.
3வது சுற்றில் புள்ளிகளை பெறும் வகையில், அதிரடியாக குத்துகளை விட்டார் தேவேந்திரோ சிங். ஆனால் குத்துகளில் இருந்து தப்பும் வகையில், அயர்லாந்து வீரர் விலகியும், கட்டிப்பிடித்து நேரத்தை வீணடித்தார். இதனால் பெனால்டியாக தேவேந்திரோ சிங்கிற்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் தேவேந்திரோ சிங் 8-6 என்ற முன்னிலை பெற்றார்.
ஆனால் போட்டியின் முடிவில் 18-23 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்த அயர்லாந்து வீரர் பேடி பார்னஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால் தேவேந்திரோ சிங் ஒலிம்பிக் பதக்க வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் போட்டியின் நடுவர்கள் இந்திய வீரருக்கு எதிராக செயல்பட்டதாக, இந்திய பயிற்சியாளர் பெர்னாண்டஸ் குற்றச்சாட்டு உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தங்களின் முழு திறனையும் வெளிப்படுத்தியும், வெற்றிப் பெற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. அயர்லாந்து வீரர் பல முறை, தேவேந்திரோ சிங்கை கட்டிப்பிடித்தும் அம்பயர் கண்டுகொள்ளவில்லை. மேலும் தேவேந்திரோ சிங் குத்துகளை வாங்கவிட்டாலும், அயர்லாந்து வீரருக்கு புள்ளிகள் அளிக்கப்பட்டன என்றார்.
இது குறித்து இந்திய பயிற்சியாளர் சாது கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பதக்கம் எதுவும் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. வீராங்கனை மேரி கோம் பதக்கம் வென்று, இந்திய குத்துச்சண்டை அணிக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றார்.