
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் தொடர்புடைய 80 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த முறை தான் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவிற்கு அதிக அளவிலான பதக்கங்கள் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குத்துச்சண்டை:
லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவில் இருந்து விஜிந்தர் சிங்(75 கிலோ), விகாஸ் கிருஷ்ணன், ஜெய் பகவான் (60 கிலோ), சிவ தபா(56 கிலோ), தேவிந்திரோ சிங்(49 கிலோ), மனோஜ் குமார் (64 கிலோ), சுமித் சங்வன்(81 கிலோ) ஆகிய 7 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் விஜிந்தர் சிங் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். அதேபோல ஆசிய போட்டியில் விகாஸ் கிருஷ்ணன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 வயதாகும் சிவ தபா இதுவரை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியர்களில் மிகவும் வயது குறைந்தவர். ஆனால் கடந்த 2008ம் ஆண்டு ஹைடர் அலைவி கோப்பைக்கான போட்டி மற்றும் 2009ம் ஆண்டு ஐரோப்பிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டி ஆகியவற்றில் தங்கப்பதக்கம் பெற்றவர். இவரும் லண்டன் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் பெறுபவர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பெண்கள் குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் மட்டுமே லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். 5 முறை உலக சாம்பியனாகி உள்ள இவர், சமீபகாலமாக பின்னதங்கி வருகிறார். ஒலிம்பிக் போட்டியில் கடும் போட்டியை எதிர்கொள்ள உள்ள மேரி கோம், ஒரு பதக்கமாவது வெல்ல வாய்ப்புள்ளது.