
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி முதல் முறையாக சேர்த்து கொள்ளப்பட்டது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் பங்கேற்றார். அரையிறுதி போட்டி வரை முன்னேறிய மேரி கோம், இங்கிலாந்தின் நிகோலா ஆதம்ஸ் உடன் மோதினர்.
அரையிறுதி போட்டியில் தோல்வி அடையும் இரு வீராங்கனைகளுக்கும் வெண்கலப்பதக்கம் கிடைக்கும். எனவே வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்த மேரி கோம் இன்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எதிர்பார்ப்புடன் போட்டியில் பங்கேற்றார்.
போட்டியில் 2 நிமிடங்களை கொண்ட 4 சுற்றுகளில் இரு வீராங்கனைகளும் மோதினர். இதில் முதல் சுற்றில் அதிரடி குத்துகளை விட்ட இங்கிலாந்து வீராங்கனை 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 2 சுற்றிலும் ஆக்ரோஷமாக செயல்பட்ட இங்கிலாந்து வீராங்கனை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
உலக சாம்பியனான இங்கிலாந்து வீராங்கனை நிகோலா ஆதம்ஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவே, 3வது சுற்றில் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3 சுற்றுகளை இழந்த மேரி கோம் மேற்கொண்டு போராடியும் வெற்றி பெற முடியவில்லை. இதனால் 4வது சுற்றில் 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை கைப்பற்றினார்.
இதன் மூலம் போட்டியின் முடிவில் இங்கிலாந்து வீராங்கனை நிகோலா ஆதம்ஸ் 11-6 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி அடைந்தாலும் வெண்கலப்பதக்கம் பெற உள்ளார்.
பெண்களுக்கான குத்துச்சண்டையில் இதுவரை 5 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள இந்திய வீராங்கனை மேரி கோம், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.