பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் ஒன்றை எடுக்கிறார். அந்த படத்தில் மேரி கோமாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.
இந்நிலையில் நொய்டா வந்த மேரி கோம் இந்த படம் குறித்து கூறுகையில்,
நான் அந்த படத்தில் நடித்தால் அது கண்டிப்பாக பிலாப் தான். எனக்கு குத்துச் சண்டை தான் தெரியும். நடிப்பு எல்லாம் தெரியாது. அந்த படம் நன்றாக ஓட வேண்டும் என்று நினைக்கிறேன். என் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் எடுப்பதில் பெரு மகிழ்ச்சியாக உள்ளது. கனவு நனவானது போன்று உள்ளது. என் வாழ்க்கையும் படமாகும் என்று நான் நினைத்ததே இல்லை. படத்தை எடுப்பவர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்திருப்பது விளையாட்டு வீரர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. இந்த பிரச்சனை விரைவில் தீரும் என்று நம்புகிறேன்.