
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் பங்கேற்க 81 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் இந்திய குத்துச்சண்டை அணியில் வீரர்கள், வீராங்கனை பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. இதற்காக இந்திய குத்துச்சண்டை அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவர்களுக்கு கியூபாவை சேர்ந்த பிலாஸ் இங்லிசியஸ் பெர்ணான்டஸ் பயிற்சி அளித்து வருகிறார்.
இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய குத்துச்சண்டை அணிக்கு பதக்கம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனது மகளின் திருமணத்திற்கு கூட செல்லவி்ல்லை என்று பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய குத்துச்சண்டை அணியில் உள்ள வீரர்கள், என்னை ஒரு தந்தையாகவே பாவிக்கின்றனர். அவர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பினால், எனக்கு சொந்த வீட்டின் மீதான ஏக்கம் கூட ஏற்படுவதில்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் எனது ஒரு மகள் சோச்சிக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப் போட்டிக்கு பயிற்சியளிக்க வேண்டிய நிலையில் இருந்தேன். அதனால் மகளின் திருமணத்திற்கு என்னால் போக முடியவில்லை.
எனது மகள் தற்போது தனது கணவருடன் மெக்சிகோவில் குடியேறி உள்ளார். ஆனால் இன்னும் அவளை நேரடியாக சந்திக்க கூட முடியவில்லை. கடந்த 1990ம் ஆண்டு இந்திய அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றி வரும் எனக்கு, நான் ஒரு இந்தியன் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
எனது மகளின் திருமணத்தின் போது, அவளுக்கு ஒரு பரிசு பொருளை அனுப்பினேன். அதற்கு அவள், அப்பா, உங்களுக்காக மெக்சிகோவி்ல் ஒரு அகடமியை துவங்க உள்ளேன். அப்போது நீங்கள் இங்கே வந்து என்னுடன் நாட்களை செலவழிப்பீர்களே என்று கூறினாள்.
இந்திய குத்துச்சண்டை அணி ஆண்டு தோறும் வளர்ச்சி பாதையில் செல்கிறது. இதனை காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிடைத்த பதக்கங்கள் நிரூபித்தன. மேலும் ஒலிம்பிக் போட்டியிலும் நமது அணியின் வெற்றி நடை தொடரும்.
இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு பயம் என்பது மறந்து, எப்படிப்பட்ட கடினமான சந்தர்ப்பங்களையும் எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துள்ளனர்.
இந்திய இளம் குத்துச்சண்டை வீரர் சிவ தபா, ஒரு சிறந்த வளரும் வீரர். அவரை போன்ற பல வீரர்களும், சீனியர் பிரிவு வரை விளையாடி ஓய்வு பெற்றுள்ளனர். இதன்மூலம் நமது அணியின் வளர்ச்சியை அறிந்து கொள்ளலாம். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய குத்துச்சண்டை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.