சென்னை: இந்தியா இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை உலகக் கோப்பைப் போட்டிகளில் லீக் சுற்று, சூப்பர் சிக்ஸ், காலிறுதி, இறுதிப் போட்டிகளில் சந்தித்துள்ளது. ஆனால் அரை இறுதிப் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
அரை இறுதிப் போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியதே இல்லை. அதேசமயம், உலகக் கோப்பைத் தொடரில் டோணி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியைச் சந்தித்ததில்லை.
இப்படி ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் இரு அணிகளுக்கு இடையே எக்கச்சக்கமாக உள்ளன.

இரு அணிகளும் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் லீக் சுற்று, சூப்பர் சிக்ஸ், காலிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் ஆடியுள்ளன. ஆனால் முதல் முறையாக அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
இரு அணிகளும் உலகக் கோப்பையில் 10 முறை மோதியுள்ளன. இதில் 7 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 3 முறை இந்தியா வென்றுள்ளது.
ஆஸ்திரேலியா அரை இறுதிப் போட்டியில் இதுவரை தோற்றதே இல்லை. 1999ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த போட்டி டை ஆனது. 5 போட்டிகளில் (1975, 87, 96, 2003, 2007) வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டோணி தலைமையில் இந்திய அணி ஒரு போட்டியில் அதாவது கடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் மோதியுள்ளது. அதில் இந்தியாவே வெற்றி பெற்றது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா ஒரு தோல்வியையும் சந்திக்கவில்லை. மோதிய 7 போட்டிகளிலும் அது வென்றுள்ளது. மாறாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் போட்ட ஒரே இந்தியர் அஜய் ஜடேஜா மட்டுமே. அதேசமயம், ஆஸ்திரேலியத் தரப்பில் ரிக்கி பான்டிங் 2 சதம் போட்டுள்ளார்.
கடந்த 2011 தொடரில் இடம் பெற்றிருந்த வீரர்களில் இவர்கள் மட்டும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுகின்றனர் - மைக்கேல் கிளார்க், ஷான் வாட்சன், பிராட் ஹாடின், மிட்சல் ஜான்சன், டோணி, விராத் கோஹ்லி, ஆர்.அஸ்வின், சுரேஷ் ரெய்னா.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இப்போதுதான் முதல் முறையாக சிட்னியில் விளையாடவுள்ளது இந்தியா. ஆஸ்திரேலியாவுக்கு இது 2வது போட்டியாகும்.
இந்தியா அரை இறுதியில் வென்றால், இந்திய அணிக்கு அது புதிய சாதனையாகும். அதாவது தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற சாதனையை அது படைக்கும். இதற்கு முன்பு 1983 (வெற்றி), 2003, 2011 (வெற்றி) ஆகிய ஆண்டுகளில் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.
ஆஸ்திரேலியா இதுவரை 6 முறை இறுதிப் போட்டியில் ஆடியுள்ளது.
ஆஸ்திரேலியாவுடனான அரை இறுதிப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் இந்தியா, இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். காரணம், லீக் பிரிவில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா அதிக புள்ளிகளைப் பெற்றுள்ள காரணத்தால்.