மும்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது 10 வினாடிகள் கொண்ட விளம்பரத்தை ஒளிபரப்பு செய்ய ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணமாக பெறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அளவிற்கு வேறு எந்த போட்டியும் பரபரப்பாக அமையாது. இரு நாடுகளுக்கு இடையிலான போட்டி, இரு கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ரைவல்ரியாக பார்க்கப்பட்டு வருவதே இதற்கு முக்கியமான காரணமாகும். இதனால் இந்த இரு அணிகளும் எப்போது மோதினாலும் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்றே கூறலாம்.

அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர் தான். எம்சிஜி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடைசி பந்து வரை இரு அணிகளும் வெற்றிக்காக போராடினார்கள். இதனை பார்த்த அனைத்து வீரர்களும், இதனைவிட சிறந்த போட்டி டி20 உலகக்கோப்பை தொடரில் அமையாது என்று வெளிப்படையாக கூறினார்கள்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்து இரு போட்டிகளில் விளையாட உள்ளன. முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங் முடிவடைந்த நிலையில் திடீரென கனமழை பெய்ததால், பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடியாமல் போனது இதனால் ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால் ரசிகர்களை விடவும் ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தான் சோகத்தில் மூழ்கியது.
ஏனென்றால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிகள் கொண்ட விளம்பரத்தை ஒளிபரப்பு செய்வதற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டதால், ஒளிபரப்பு நிறுவனத்தின் விளம்பர வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சூப்பர் 4 போட்டியில் மழை பெய்தால், ரிசர்வ் டே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை தொடர் மூலமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூப்பர் 4 சுற்றில் நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டியும் கைவிடப்பட்டால் ஒளிபரப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதாலேயே, ரிசர்வ் டே முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.