சிட்னி: ஆஸ்திரேலியாவுடன் மோதப் போவது குறித்து சமூக வலைதளங்களில் நம்மவர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்திய அணியோ பரபரப்பே இல்லாமல் இருப்பது போலத் தெரிகிறது.
குறிப்பாக இந்தியாவின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் முகம்மது ஷமி எந்த டென்ஷனும் இல்லாமல் ஒரு நல்ல பிரேக்கை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார்.
இன்று அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை. முன்னதாக அவரது முழங்காலில் வலி ஏற்பட்டிருப்பதாக ஒரு செய்தி பரவியது. ஆஸ்திரேலியாவின் கடுமையான பிட்ச்சுக்களில் பவுலிங் செய்து காலில் வலி வந்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஷமி முழு உடல் தகுதியுடன் இருப்பதாக அணியின் மீடியா மேலாளர் ஆர்.என்.பாபா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஷமி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். 100 சதவீத உடல் தகுதியுடன் உள்ளார். அரை இறுதிப் போட்டிக்கு அவர் முழு வீச்சில் பந்து வீசுவார் என்றார்.
இன்று மற்ற வேகப் பந்து வீச்சாளர்களான மொஹித் சர்மாவும், உமேஷ் யாதவும் பயிற்சியில் ஈடுட்டனர். கால்பந்து ஆடினர். வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஷமி ஈடுபடவில்லை. அவரே விரும்பிக் கேட்டு இன்று ஓய்வெடுத்து வருவதாக பாபா கூறியுள்ளார்.
அதேசமயம், இன்றைய பயிற்சியில் புவனேஸ்குமாரும் முழு மூச்சாக ஈடுபட்டார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 7 போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் ஷமி என்பது குறிப்பிடத்தக்கது.