சென்னை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் மொத்தமாக 13 ஒய்டு, 3 நோ-பால்களை வீசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பந்துவீசுவதற்கும் தொடர்ந்து இரண்டாவது முறையாக கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால், இன்னும் ஒரு முறை இதுபோல் நடந்தால் தோனிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 217 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 57, டெவன் கான்வே 47, ராயுடு 27*, துபே 27 என்று அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடினர். இதனைத் தொடர்ந்து சவாலான இலக்கை விரட்டிய லக்னோ அணி 20 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சென்னை அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசுகையில், சென்னை அணியின் வேகப்பந்துவீச்சின் தரம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. பிட்ச்-ற்கும், சூழலுக்கும் ஏற்றாற்போல் பந்துவீச வேண்டும். அவர்கள் பந்துவீச்சாளர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். எதிரணி வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அவர்கள் என்ன யுத்திகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதனை நீங்களும் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.
அதேபோல் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் கூடுதலாக நோபால் மற்றும் ஓய்டு பந்துகளை வீசினோம். இது நிச்சயம் சரியான விஷயம் கிடையாது. நோபால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், வீரர்கள் புதிய கேப்டன் கீழ விளையாட நேரிடும் என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலேயே ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக தோனிக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. தற்போது லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விடவும் பந்துவீசுவதற்கு அதிக நேரத்தை சென்னை அணி எடுத்துக் கொண்டது.

இதனால் சென்னை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, கேப்டன் தோனிக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தப் போட்டியிலும் சென்னை அணி பந்துவீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டால், கேப்டன் தோனி ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும். அதனை தான் கேப்டன் தோனி, "i'll be off" என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார். இந்தப் போட்டியில் மட்டுமே சென்னை அணி வீரர்கள் 13 ஒய்டு, 3 நோ-பால்களை வீசியுள்ளனர்.