துபாய்: கிரிக்கெட் உலகின் அடுத்த 'சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படும் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி துபாயில் நடைபெற்று வரும் அண்டர்-19 ஆசியக் கோப்பை தொடரில் ருத்ர தாண்டவம் ஆடி உலக சாதனை படைத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எதிரான ஆட்டத்தில் சிக்ஸர் மழை பொழிந்த அவர், பல சாதனைகளைத் தகர்த்தெறிந்துள்ளார்.
ஆசியக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்ற அமீரக அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. ஆனால் அந்த அணி இப்படி ஒரு அடியை எதிர்பார்க்கவில்லை. தொடக்க வீரராகக் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, மைதானத்தின் நாலாபுறமும் பந்தைத் தெறிக்கவிட்டார்.

வெறும் 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். இதில் 14 சிக்ஸர்கள் மற்றும் பல பவுண்டரிகள் அடங்கும். இவரது இந்த அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 433 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
ஒரே இன்னிங்ஸில் 14 சிக்ஸர்கள்: இளைஞர் ஒருநாள் போட்டி (Youth ODI) வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை வைபவ் படைத்தார். இதற்கு முன் 2008-ல் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹில் 12 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
சிக்ஸர்களில் அரைசதம்: 14 வயதே ஆன வைபவ், அண்டர்-19 ஒருநாள் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 50 சிக்ஸர்களைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார். வெறும் 12 இன்னிங்ஸ்களிலேயே அவர் மொத்தம் 57 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
இந்திய சாதனை முறியடிப்பு: இதற்கு முன் இந்திய ஜூனியர் அணியில் உன்முக்த் சந்த் 38 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை வைபவ் மிக எளிதாக முறியடித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஒருபுறம் இருக்க, ஆரோன் ஜார்ஜ் (69) மற்றும் விஹான் மல்ஹோத்ரா (69) ஆகியோரும் அரைசதம் அடித்து அசத்தினர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 433 ரன்கள் குவித்தது. இது இந்திய அண்டர் 19 அணி ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
2025 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி, தான் ஏன் அந்த விலைக்குத் தகுதியானவர் என்பதை இந்த இன்னிங்ஸ் மூலம் உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளார். 'குட்டி கிறிஸ் கெயில்' என இப்போதே ரசிகர்கள் இவரைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.