பாட்னா: இந்திய கிரிக்கெட் வரலாற்றில்நம்பமுடியாத நிகழ்வாக 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 2025/26 ரஞ்சி டிராபித் தொடருக்கான பீகார் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு முன் எப்போதும் ஒரு மாநில கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக 14 வயது வீரர் நியமிக்கப்பட்டதில்லை.
சில நாட்களுக்கு முன்பு, பீகார் கிரிக்கெட் சங்கத்தில் தேர்வாளர்கள் பற்றாக்குறையால் ரஞ்சி டிராபி அணி அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது அந்தத் தடைகள் நீக்கப்பட்டு, 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சகிபுல் கனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் துணை கேப்டனாக 14 வயது வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சி டிராபி போன்ற ஒரு பாரம்பரியமான மற்றும் கடினமான தொடரில், ஒரு 14 வயது வீரர் துணை கேப்டனாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சமீப காலமாக இந்தியக் கிரிக்கெட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களில் வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் ஒன்று. தனது 14-வது வயதிலேயே இந்திய அண்டர்-19 அணியில் இடம்பிடித்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கடினமான நாடுகளில் சதமடித்து தனது திறமையை உலகுக்குப் பறைசாற்றினார்.
2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக விளையாடிய இவர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி, டி20 மற்றும் ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 இளைஞர் ஒருநாள் போட்டிகளில், 174.02 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டுடன் 355 ரன்களைக் குவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இளைஞர் (யூத்) டெஸ்ட் போட்டியிலேயே 113 ரன்கள் குவித்து, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தான் சாதனை படைக்க முடியும் என நிரூபித்தார்.
வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான திறமையின் மீது நம்பிக்கை வைத்து, பீகார் கிரிக்கெட் சங்கம் இந்த மிகப்பெரிய பொறுப்பை அவருக்கு வழங்கியுள்ளது. ஒரு மூத்த வீரருக்குரிய பொறுப்புடன் வைபவ் துணை கேப்டனாக களமிறங்க உள்ளார்.
அதே சமயம், என்னதான் திறமையான பேட்ஸ்மேனாக இருந்தாலும் வைபவ் சூர்யவன்ஷி ஒரு சிறுவன் தான். அவருக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தும் வகையில் துணை கேப்டன் பதவியை அவசரப்பட்டு அளிக்கலாமா? என்ற கேள்வியும் உள்ளது. இது அவரது பேட்டிங் திறனை பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது என சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
பீகார் ரஞ்சி டிராபி 2025/26 அணி:
பியூஷ் குமார் சிங், பாஸ்கர் துபே, சகிபுல் கனி (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி (துணை கேப்டன்), அர்னவ் கிஷோர், ஆயுஷ் லோஹருகா, பிபின் சௌரப், அமோத் யாதவ், நவாஸ் கான், சகிப் ஹுசைன், ராகவேந்திர பிரதாப் சிங், சச்சின் குமார் சிங், ஹிமான்ஷு சிங், காலித் ஆலம், சச்சின் குமார்.