பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பெர்த் நகரில் இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 310 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், அதை எளிதாக எட்டி வெற்றி பெற்றது அந்த அணி.

5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. முதல் ஒருநாள் போட்டி இன்று பெர்த் டபிள்யூ.ஏ.சி.ஏ மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்கியது.
வேகப்பந்துக்கு சாதகமான பெர்த் பிட்சில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரன் சேர்க்கப்பட்டு முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் களம் கண்டார்.
இந்திய அணியில், ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 36 ரன்களாக இருந்தபோது ஹசில்வுட் பந்தில் மிட்சல் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து, 9 ரன்களில் தவான் அவுட் ஆனார். 22 பந்துகளில் அவர் இந்த ரன்களை எடுத்திருந்தார்.

அதேநேரம், ரோகித்ஷர்மா சிறப்பாக ஆடி 122 பந்துகளில் சதம் விளாசினார். 3 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் உதவியுடன் ரோகித் சதம் கடந்தார். மறுமுனையில், விராட் கோஹ்லியும் அருமையான ஷாட்டுகள் மூலம் அரை சதம் கடந்தார்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தூக்கியடிக்க முற்பட்டபோது 91 ரன்களில், பால்க்னர் பந்தில் எல்லைக்கோட்டு அருகே ஆரோன் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் டோணி 13 பந்துகளில், அருமையான ஒரு சிக்சர் உதவியோடு 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பாக்னர் பந்தில், போலன்டின் சூப்பரான கேட்சால் அவுட் ஆனார்.
இதன்பிறகு இறுதி கட்டத்தில், ரோகித் ஷர்மாவோடு ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும் அதிரடி காட்டினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ரோகித் ஷர்மா அதிகபட்சமாக 171 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா 5 பந்துகளில் 10 ரன்களுடன் களத்தில் நின்றார்.
7 சிக்சர்கள், 13 பவுண்டரிகள் உதவியோடு, 163 பந்துகளில் 171 ரன்கள் குவித்த ரோகித் ஷர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு கடைசிவரை சிம்ம சொப்பனமாக காட்சியளித்தார். ஆஸ்திரேலிய தரப்பில், பாக்னர் அதிகபட்சமாக 1 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன்பிறகு பேட் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் பின்ச் 8 ரன்களிலும், டேவிட் வார்னர் 5 ரன்களிலும் பரிந்தர் ஸ்ரன் பந்து வீச்சில் அவுட் ஆகினர்.
21 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறிய நேரத்தில், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜார்ஜ் பெய்லி ஜோடி இணைந்து ஆட்டத்தை ஆஸ்திரேலியா பக்கம் திருப்பியது. டோணி பவுலர்களை மாற்றி பார்த்தும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இருவருமே சதம் அடித்த நிலையில், 41.5வது ஓவரில் ஆஸி. 263 ரன்கள் குவித்த நிலையில், அஸ்வின் பந்தில் புவனேஸ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து, 112 ரன்கள் எடுத்து ஜார்ஜ் பெய்லி அவுட் ஆனார்.
இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 242 ரன்களை குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய மேக்ஸ்வெல் 6 ரன்களில் அஸ்வின் பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியதால் போட்டியில் திரில் ஏற்பட்டது.
கடைசி ஓவரில் 2 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற முடியும் என்ற நிலையில் பரிந்தர் ஸ்ரன் பந்து போட வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில், கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து ஸ்டீவன் ஸ்மித் 149 ரன்களில் அவுட்டானார்.
ஓவரின் 2வது பந்தை புதிய பேட்ஸ்மேன் பாக்னர் எதிர்கொண்டார். அவர் சந்தித்த முதல் பந்து வைடானது. அடுத்த பந்தை லாங் ஆன் திசையில் பாக்னர் சிங்கிள் தட்டினார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் இந்திய அணி கூடுதலாக ரன் அடிக்க தவறியதும், நடு ஓவர்களில் இந்திய பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த தவறியும் ஆஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்துவிட்டது. இவ்விரு அணிகள் நடுவேயான 2வது ஒருநாள் போட்டி பிரிஸ்பேன் நகரில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது.