ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, அம்பத்தி ராயுடுவின் சதம் மீட்டெடுத்து கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது.
ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் இரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. ஹராரே நகரில் இன்று நடைபெறும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.

ரஹானே மற்றும் முரளி விஜய் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விஜய் 1 ரன், ரஹானே 34 ரன்கள், திவாரி 2 ரன்கள், கேதர் ஜாதவ் 5 ரன்களிலும், ராபின் உத்தப்பா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி 24.2 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 87 ரன்களே எடுத்து தடுமாறியது. அப்போதைய நிலையில், 150 ரன்களை கடப்பதே பெரும் சவாலானதாக இருந்தது. ஆனால், ஒன்டவுன் பேட்ஸ்மானக இறங்கி தனித்து போராடிக் கொண்டிருந்த அம்பத்தி ராயுடுவுக்கு, ஸ்டூவர்ட் பின்னி நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து சரிவில் இருந்து அணியை மீட்டார்.
இந்த ஜோடி, முதலில் மெதுவாகவும் பிறகு துரித கதியிலும் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜிம்பாப்வே பவுலர்கள் எவ்வளவோ முயன்றும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 48.5வது ஓவரில் 77 ரன்களுடன் ஸ்டூவர்ட் பின்னி வெளியேறினார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்களை எடுத்து கவுரவமான ஸ்கோரை எட்டியது. அம்பத்தி ராயுடு 124 ரன்களுடனும், அக்ஷர் பட்டேல் 2 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர்.
ஜிம்பாப்வே தரப்பில் டொனால்ட் திரிபனோ மற்றும் சிபாபா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒருநாள் போட்டிகளில் பவுலர்களுக்கு சாதகமான விதிமுறைகள் புகுத்தப்பட்டுள்ளதால் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டோணி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு உள்ளது. அவ்வாறு வெற்றி பெற்றால்தான் ஒருநாள் தரவரிசையில் இந்தியாவால் 2வது இடத்தில் நீடிக்க முடியும்.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியில், வழக்கமான கேப்டன் டோணி, டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, தவான், அஸ்வின் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரஹானே தலைமையிலான 2வது கட்ட அணி இந்த தொடரில் விளையாடுகிறது.
இந்திய அணி கடைசியாக ஜிம்பாப்வே அணியை உலக கோப்பையில் எதிர்கொண்டது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. கடைசியாக 2013ம் ஆண்டு இந்திய அணி ஜிம்பாப்வேயில் விளையாடியது. 5 போட்டிக்கொண்ட தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் வென்று இருந்தது.
இரு அணிகளும் இதுவரை 57 ஆட்டங்களில் மோதியுள்ளன. இந்தியா 45 போட்டியில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே 10 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2 போட்டி 'டை' ஆனது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கியது.
11 பேர் கொண்ட இந்தியா அணி விவரம்: ரஹானே (கேப்டன்), முரளி விஜய், ராபின் உத்தப்பா (விக்கெட் கீப்பர்), மனோஜ் திவாரி, அம்பதி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங், குல்கர்னி, புவனேஸ்வர்குமார், அக்ஷர் பட்டேல், .
ஜிம்பாப்வே அணி விவரம்: சிங்கும்புரா (கேப்டன்), சிக்கந்தர் ரசா, முடும்பாமி, வில்லியம்ஸ், சிகாபா, மசகட்சா, சிபாண்டா, கிரீமர், விடோரி, திரிபநோ, பயன்ங்கரா.