"எனது வாழ்நாளின் சிறந்த ஆட்டம் இது".. அதிரடியால் இந்தியாவை வீழ்த்திய டுமினி நெகிழ்ச்சி
தர்மசாலா: "எனது மிகச்சிறந்த ஆட்டத்தில் ஒன்று இது..." என்று நேற்றைய டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய அதிரடி ஆட்டத்தை குறிப்பிட்டு பெருமைப்படுகிறார் தென் ஆப்பிரிக்க அதிரடி இடக்கை பேட்ஸ்மேன் ஜே.பி.டுமினி.
200 ரன்கள் என்ற இமாலய இலக்கோடு பேட் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கி 34 பந்துகளில் 68 ரன்கள் விளாசி நாட்-அவுட்டாக களத்தில் நின்று ஜொலித்தார் டுமினி. இந்தியாவிடமிருந்த வெற்றியை டுமினி பறித்துச் சென்றார் என்றுதான் இந்த ஆட்டத்தை குறிப்பிட்டு சொல்ல முடியும்.

கடைசி ஓவர் திரில்
கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்ரீநாத் அரவிந்த் வீசிய பந்தில் இமாலய சிக்சர் விளாசியதுடன், வெற்றிக்கான சிங்கிள் ரன்னையும் தானே அடித்து தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றியை பறித்துக்கொடுத்தார் டுமினி.

இமாலய பார்ட்னர்ஷிப்
டுமினியும், பர்ஹான் பெகார்டியனும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் நாட்-அவுட் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. இந்த ஆட்டத்துக்காக டுமினி மேன் ஆப் தி மேட்ச் விருதை தட்டிச் சென்றார்.

எதிர்பார்த்தோம்
நிருபர்களிடம் டுமினி கூறியது: இது ஒரு நீண்ட தொடர். அதன் முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையும் அளித்துள்ளது. கடைசி ஓவரில் 10 ரன்களை ஒட்டி அடிக்க வேண்டிய தேவை இருந்தால் அதை எட்டிவிடலாம் என்று கணித்திருந்தோம்.

பவுலரின் கட்டுப்பாடு
கடைசி ஓவரில் அரவிந்த் ஒரு பந்தை கட்டுப்பாட்டை இழந்து ஃபுல்டாசாக வீசினார். அதை நான் சரியாக பயன்படுத்தி சிக்சருக்கு பறக்கவிட்டேன். இந்த சிறப்பான தொடக்கத்தை தென் ஆப்பிரிக்கா தொடர் முழுக்க கொண்டு செல்லும்.

சிறந்த ஆட்டம்
இப்போட்டியில் நான் ஆடியது கண்டிப்பாக எனது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகும். தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஒப்பனிங் ஜோடி சிறப்பான ரன் குவிப்பை கொடுத்தது. அதையே பின்பற்றி மிடில் ஆர்டரிலும் சிறப்பாக விளையாடினோம். பர்ஹாடினும் சிறப்பான பங்களிப்பை செய்தார். இவ்வாறு டுமினி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications